காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்த மக்கள்.. இப்போது அதற்காக வருத்தப்படுகிறார்கள்: பிரதமர் மோடி
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்று இம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்த மக்கள் இப்போது அதற்காகாக வருத்தப்படுகிறார்கள். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சியே இல்லை” என்று கூறியுள்ளார்.
இந்தி மொழி, கலாச்சார காவலர்கள், மாட்டிறைச்சி என பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றதுதான் ஹரியானா. சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் மாட்டிறைச்சி கடத்தல் விவகாரங்களில் ஹரியானாவின் பெயர் பலமாக அடிபட்டிருந்தது. இப்படி இருக்கையில் விரைவில் இந்த மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

இம்மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளை அனைத்திற்கும், அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின்றன. பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு இங்கு பலத்த அடி விழுந்தது. மறுபுறம் கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானாவில் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதால், மக்கள் மத்தியில் இயல்பாகவே அதிருப்தி இருக்கிறது. இதையெல்லாம் மீறி கட்சி எப்படி வெற்றிப்பெறபோகிறது? என்று கேள்வி எழுந்திருக்கும் நிலையில், வெற்றியை உறுதி செய்ய பிரதமர் மோடியை கட்சி களமிறக்கியிருக்கிறது.
குருஷேத்ராவில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்ட மோடி, காங்கிரஸ் மீது கடும் விமர்சனங்களை அடுக்கியுள்ளார். அவர் பேசுகையில், “காங்கிரஸ் ஆட்சி செய்ய வாய்யபளித்த மாநில மக்கள், தற்போது இதற்காக வருந்தி வருகின்றனர். இமாச்சலப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், பணவீக்கத்திலும், ஊழலிலும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் அம்மாநில மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
நம் நாட்டில் காங்கிரஸை விட நேர்மையற்ற, வஞ்சகமான கட்சி வேறு ஏதும் கிடையாது. இக்கட்சி ஆளும் மாநிலங்களில் முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. ஒரு நல்ல மாநிலத்தை எப்படி பாழக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் தொடர்ந்து நமக்கு காட்டி வருகிறது.
உதாரணமாக இமாச்சலப் பிரதேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் அண்டை மாநிலம்தான் இது.. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு காங்கிரஸ் அரசு அமைந்தது. ஆனால் இன்று நிலைமை என்ன தெரியுமா? அம்மாநில மக்கள் யாரும் சந்தோஷமாக இல்லை. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் காங்கிரஸ் அங்கு நிறைவேற்றவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1500 கொடுப்போம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளாக பெண்கள் இந்த பணத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதுகூட பரவாயில்லை.. அங்கு அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க நிதி இல்லை. முதலமைச்சரும், மாநில அமைச்சர்களும் அரசாங்கத்திற்காக தங்களது சம்பளத்தை விட்டு கொடுப்பதாக நடிக்கின்றனர்” என்று விமர்சனங்களை அடுக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications