புழல் சிறையில் அல் உம்மா தீவிரவாதியிடம் இருந்த செல்போன் பறிமுதல்: போலீசுக்கு அடி உதை
சென்னை: சென்னை புழல் சிறையில் செல்போனில் பேசிய அல் உம்மா தீவிரவாதிகளைக் கண்டித்த சிறைத்துறை கண்காணிப்பு போலீஸ்காரர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடித்து உதைத்த தீவிரவாதிகள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புழல் மத்திய சிறையில் 650க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு உள்ள உயர்மட்ட பாதுகாப்பு பிரிவு பகுதியில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 9 அல் உம்மா தீவிரவாதிகள் கடந்த 2013-ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் அனைவரும் சிறையில் இருந்தாலும் வெளியில் உள்ளவர்களிடம் சாதாரணமாக செல்போன் மூலமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி சிறை போலீசார் தட்டிக்கேட்டால், போலீஸ்காரர்களுக்கு கொலைமிரட்டல் விடுப்பதோடு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறி வந்துள்ளனர்.
சிறையில் ஆய்வு
நேற்று பகல் சிறைத்துறை கண்காணிப்பு (விஜிலன்ஸ்) டி.எஸ்.பி.லட்சுமணன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் புழல் சிறையில் திடீர் ஆய்வு செய்தனர். உயர்மட்ட பாதுகாப்பு பிரிவில் உள்ள அல் உம்மா தீவிரவாதிகள் அடைக்கப்பட்டு உள்ள அறையிலும் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தீவிரவாதி உமர்பரூக் என்ற கைதி செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அவரிடம் இருந்து சைமன் என்ற போலீஸ்காரர் செல்போனை பறித்தார். உடனே ஆத்திரம் அடைந்த உமர்பரூக்குடன் சேர்ந்து தீவிரவாதிகள் காஜா ஹூசேன், சாகுல்ஹமீது ஆகியோர் சைமனை சரமாரியாக தாக்கினர். மேலும், ‘உன்னையும் உன் குடும்பத்தையும் ஜெயிலில் இருந்தே கொன்று விடுவோம்' என மிரட்டியதாகவும் தெரிகிறது. தொடர்ந்து 9 தீவிரவாதிகளும் சத்தம் போட்டு கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த போது சிறைத்துறை டி.ஐ.ஜி.ராஜேந்திரன், சூப்பிரண்டு அன்பழகன் ஆகியோரும் உடனிருந்தனர். உடனே சிறை போலீசார் அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து உமர்பரூக்கிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் வைத்திருந்த 4 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்த தகவல் மற்ற கைதிகளுக்கும் பரவியது. அதனால் ஜெயிலுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சிறைத்துறை கண்காணிப்பு போலீஸ் தரப்பில் புழல் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications