மோடியுடன் மேடை ஏற மாட்டேன்: மகாராஷ்டிர முதல்வர் சவானும் அறிவிப்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெறும் மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் ஏறப் போவதில்லை என்று அம்மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் பிரதமர் மோடியுடன் மேடை ஏறினார் பிரித்விராஜ் சவான். ஆனால் முதல்வர் சவானுக்கு எதிராக பாஜக தொண்டர்கள் கோஷம் போட்டதால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.
இதேபோல் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய நெடுஞ்சாலை திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதில் காங்கிரசை சேர்ந்த மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவு பங்கேற்றார். ஆனால் ஹுடா பேச தொடங்கியதும் கூட்டத்தில் இருந்த பாரதிய ஜனதா தொண்டர்கள் கூச்சலிட தொடங்கினர்.
இதனால் அவர் பேச்சை பாதியில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஹுடா, இனிமேல் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என்றார்.
இப்படி காங்கிரசை சேர்ந்த இரண்டு மாநில முதல்வர்களுக்கும் அவமானம் ஏற்பட்டதை தொடர்ந்து இனிமேல் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சி முதல்வர்கள் பங்கேற்க கூடாது என காங்கிரஸ் கட்டளை பிறப்பித்தது.
இதனிடையே இன்று நாக்பூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் தாம் பங்கேற்க போவதில்லை என மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவான் தெரிவித்துள்ளார்.