நாட்டை ஆள மார்பு அளவு முக்கியமல்ல.. பரந்த மனதுதான் அவசியம்: பிரியங்கா
ரேபரேலி: நாட்டை ஆள்வதற்கு ஒரு மனிதரின் மார்பு அளவு முக்கியம் அல்ல.. அவர்களிடம் பரந்து மனது இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
உ.பி.யின் கோரக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசுகையில், உ.பி.யை குஜராத் போல் மாற்றுவேன் என்று முலாயம்சிங் யாதவ் கூறியதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? 24 மணி நேர மின்சாரம், ஆண்டில் 365 நாளும் எல்லா கிராமங்களுக்கும் தடையற்ற மின் விநியோகம் என்பதே இதன் அர்த்தம். இதை உங்களால் செய்ய முடியாது. உங்களுக்கு அந்த திறன் கிடையாது. அதற்கு 56 இஞ்ச் மார்பு வேண்டும்" என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்து ரேபரேலி பிரியங்கா காந்தி நேற்று பேசியதாவது:
நாட்டை ஆள்வதற்கு 56 இஞ்ச் மார்பு இருந்தால் போதாது. பரந்த மனம் வேண்டும். கொடூர அதிகாரப் போக்கு தேவையில்லை. தார்மீக பலம் வேண்டும். நாட்டின் கலாச்சாரத்தை காப்பற்றுவதற்கு உயிரை கூட தியாகம் செய்ய முன்வரவேண்டும். இது மகாத்மா காந்தியின் நாடு. இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள் என அனைத்து மதத்தினரும் இந்நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.
தலித்துகளும் பழங்குடியினரும் இந்நாட்டுக்காக தங்கள் உயிரை இழந்துள்ளனர். எனது ஒவ்வொரு துளி ரத்தத்திலும் இந்த மண் கலந்துள்ளது. இது உங்கள் நாடு. நீங்களே இதன் பாதுகாவலர்கள். இந்த நாட்டை காப்பது உங்கள் கடமை. நீங்கள் சோனியாவுக்காகவோ, இப்பகுதியின் முன்னேற்றத்துக்காவோ வாக்களிக்க வேண்டாம். ஆனால் நாட்டை வலுப்படுத்தவும், நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்கவும் வாக்களிக்க வேண்டும்.
இந்தத் தேர்தல் குறிப்பிட்ட பகுதியுடன் மட்டும் தொடர்புடைய தல்ல. மத்தியில் அடுத்த அரசை தீர்மானிக்கப்போகிறது. எனவே பிராந்திய உணர்வுகளை கடந்து நீங்கள் வாக்களிக்க வேண்டும். உங்கள் பகுதி, குழந்தைகளின் எதிர்காலம் மட்டும் பார்க்காமல் நாட்டின் எதிர்காலம் கருதியும் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு பிரியங்கா பேசினார்.












Click it and Unblock the Notifications