பெங்களூரில் தமிழ் கவுன்சிலருக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம்.. தமிழ் போஸ்டர்கள் கிழிப்பு
Recommended Video
பெங்களூர்: தமிழ் கவுன்சிலர் ஏழுமலை என்பவருக்கு எதிராக பெங்களூரில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். தமிழ் பேனர்கள், தமிழக கட்சி கொடிகள் கிழித்து எறியப்பட்டன.
பெங்களூர் நகரின் புலிகேசிநகர் தொகுதிக்குட்பட்ட சகாயபுரம் வார்டு கவுன்சிலராக உள்ளவர் ஏழுமலை. தமிழரான இவர், காங்கிரஸ் கட்சிக்காரர். ஆனால், கடந்த மாநகர தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.
இந்த நிலையில், ஏழுமலை, புலிகேசிநகர் பகுதியை தமிழ்மயமாக்குவதாக கர்நாடக ரக்ஷனா வேதிகே அமைப்பினர், குற்றம்சாட்டி வருகிறார்கள். தமிழர்கள் அதிகம் வாழும் அந்த பகுதியில், தமிழில் பேனர்கள், கட்அவுட்டுகள் இருப்பது கன்னட அமைப்பினர் கண்களுக்கு உறுத்தலை ஏற்படுத்தியது.
இதனால் கோபத்தில் இருந்த கன்னட அமைப்பினர் இன்று திடீரென, தொகுதிக்கு உட்பட்ட டேனரி ரோடு பகுதியில் போராட்டத்தில் குதித்தனர். சாலையில் சென்ற வாகனங்களில் ஒட்டியிருந்த விஜய் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் ஸ்டிக்கர்களை கூட கிழித்து எறிந்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்தனர்.
பொங்கல் வாழ்த்து கூறி ஏரியா பிரமுகர்கள் தமிழில் வைத்த பேனர், கட்அவுட்டுகளை கிழித்து எறிந்தனர். இந்த சம்பவங்களால் டேனரி ரோடு பகுதியில் மதியம் முதல் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.