எல்லைகளில் தொடரும் போராட்டத்தால் பதற்றம்...கபினி, கேஆர்எஸ் அணை பகுதிகளில் தடை உத்தரவு #cauvery
பெங்களூரு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கன்னட அமைப்பினரின் போராட்டம் தொடருவதால் எல்லைகளில் பதற்றம் நீடிக்கிறது. மேலும் காவிரி நீர் திறந்துவிடப்பட்ட கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைப் பகுதிகளில் போராட்டக்காரர்கள் ஒன்று கூட தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 10,000 கன அடி, கபினி அணையில் இருந்து 5000 கன அடி நீர் என மொத்தம் 15,000 கன அடி நீரை கர்நாடக அரசு நள்ளிரவு 12 மணிக்கு திறந்துவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையையும் அவர்கள் எரித்தனர். அதேபோல் காவிரியில் நீரை திறந்துவிட்ட கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் உருவபொம்மையையும் எரித்தனர்.

தமிழக வாகனங்கள் நிறுத்தம்
தமிழகத்திலிருந்து செல்லும் பேருந்துகள், வாகனங்கள் எல்லையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

போக்குவரத்து முடக்கம்
அதேபோல் கர்நாடகாவிலிருந்தும் தமிழகத்துக்குள் பேருந்துகள், வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தடை உத்தரவு
கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைப் பகுதிகளில் பிரம்மாண்ட பேரணிக்கு கன்னட ரக்ஷன வேதிக, ஜெய் கர்நாடகா சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன. இதனால் அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு
ஏற்கனவே கிருஷ்ணராஜகர் அணையை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு அணை மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மாண்டியாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications