பைக்கில் சுற்றி பெண்களுக்கு ஊசி போடும் மர்ம நபர்... எய்ட்ஸ் ஊசியா ? - ஆந்திராவில் பீதி!
ஹைதராபாத்: ஆந்திராவில் கடந்த சில நாட்களாக முகத்தை மூடியபடி, பைக்கில் வலம் வந்து பெண்களுக்கு ஊசி போட்டு வரும் மர்மநபரால் பீதி ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று, ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நடந்து சென்று கொண்டிருந்த அம்மாணவிகளிடம், பைக்கில் வந்த நபர் ஒருவர் வழிமறித்து முகவரி கேட்டுள்ளார். மாணவிகள் பேசிக் கொண்டிருக்கும் போதே, தனது கைகளில் இருந்த ஊசியால் இருவரையும் குத்தி, மருந்தேற்றி விட்டு தப்பி தலைமறைவாகி விட்டார் அந்த மர்மநபர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாணவிகளின் பெற்றோர், இருவரையும் அருகில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் உண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கோரகலமூடி கிராமத்தில் நேற்று அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார் நாககுமாரி (25). அப்போது கைக்குட்டையால் முகத்தை மூடியபடி, பைக்கில் வந்த மர்மநபர், நாககுமாரி எதிர்பார்க்காத வேளையில் அவருக்கு ஊசி ஒன்றைப் போட்டுள்ளார். ஊசியில் இருந்த மருந்து முழுவதையும் நாககுமாரியின் உடலில் ஏற்றிய அந்த மனிதர், கண் இமைக்கும் நேரத்தில் தப்பியுள்ளார்.
நாககுமாரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாலகோடேரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது.
அடுத்தடுத்து பெண்களைக் குறி வைத்து ஊசி போடும் அந்நபர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே ஊசி போடப்பட்ட பெண்களின் ரத்தமாதிரி பரிசோதனைக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளுக்குப் பின்னரே அப்பெண்களுக்கு என்ன மாதிரியான மருந்து உடலில் ஏற்றப்பட்டது என்பது குறித்த விபரம் தெரியவரும்.
தங்களுக்கு செலுத்தப்பட்ட மருந்து வெள்ளை நிறத்தில் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரின் ரத்தமாக இருக்க வாய்ப்பில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த மர்மநபரைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனபோதும், பெண்களைக் குறி வைத்து ஊசி போட்டு வரும் மர்ம நபர் இன்னும் கைது செய்யப்படாததால், அப்பகுதியில் உள்ள பெண்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. பெண்களாக தனிமையில் வெளியே செல்ல அவர்கள் அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications