அமைதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்கள்..பஞ்சாப்பில் 70%, கோவாவில் 83% வாக்குப்பதிவு
கோவா, பஞ்சாப் மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நடந்து முடிந்தது.
டெல்லி: பஞ்சாப் மற்றும் கோவா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடந்தது. பஞ்சாப்பில் 70 சதவீத வாக்குப்பதிவும், கோவாவில் 83 சதவீத வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளன.
பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அட்டவணையை கடந்த மாதம் 4ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி வெளியிட்டார்.
இதன்படி, பஞ்சாப், கோவா மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பஞ்சாபில் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் தலைமையில் அகாலிதளம்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க இந்த கூட்டணி கடும் முயற்சி செய்து வருகிறது. அதேநேரம், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தீவிரமாக களத்தில் குதித்துள்ளன.
பாஜவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, கட்சி தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உடல் நலக்குறைவால் இந்த முறை பஞ்சாப்பில் பிரசாரம் செய்யவில்லை. அவரது மகனும், துணைத்தலைவருமான ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் அமரிந்தர் சிங் என்று அறிவித்தார்.
ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி வேட்பாளர்களுக்காக கெஜ்ரிவால் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டார். பகவந்த் மான் முதல்வர் வேட்பாளராக கருதப்படுகிறார். மொத்தம் உள்ள 117 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை பிரசாரம் ஓய்ந்தது.
இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு பஞ்சாப்பில் வாக்குப்பதிவு தொடங்கியது. மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். லம்பி தொகுதியில் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வாக்களித்தார். இதேபோல ஜலந்தர் தொகுதியில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அவரது தாயாருடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.
சுமார் ஒரு லட்சம் போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். பஞ்சாப்பின் எந்தப் பகுதியிலும் வன்முறைகள், மோதல்கள் எதுவும் அரங்கேறவில்லை. மாலை 5 மணி நேர நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவா மாநிலத்திலும் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதாக தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார். 40 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் 251 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திட்டமிட்டபடி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் ஆரம்பால் நகரில் தனது வாக்கை பதிவு செய்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தலைநகர் பானாஜியில் இருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். கோவாவில் 5 மணி வரை எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 5 மணி வரை 83 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.