இரவு நேரத்தில் சரசரவென சரிந்த டவர் ராட்டினம்..! குழந்தைகள் உட்பட பலர் காயம்.. பதற வைக்கும் வீடியோ
மொஹாலி: பஞ்சாபில் பொருட்காட்சி ஒன்றில் ராட்டினம் அந்திரத்தில் இருந்து விழுந்த மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.
இப்போதெல்லாம் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் பொருட்காட்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. வார இறுதியில் பொதுமக்கள் இதுபோன்ற இடங்களில் கூடுவது வழக்கம்.
இருப்பினும், இதுபோன்ற பொருட்காட்சியில் போதுமான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டே வருகிறது.

பஞ்சாப்
இந்நிலையில், பஞ்சாபில் பொருட்காட்சி ஒன்றில் ராட்டினம் அந்திரத்தில் இருந்து விழுந்த மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் மொஹாலியில் பொருட்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. அதேபோல பல பொழுதுபோக்கு விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி அங்கு அமைக்கப்பட்டு இருந்த ராட்டினத்தில் பலரும் விளையாடிக் கொண்டு இருந்தனர்,

ராட்டின விபத்து
குழந்தைகள் உட்பட பலர் அதில் இருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மேலே இருந்து அந்த ராட்டினம் அப்படியே பொத்தென விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த மோசமான விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.

காயம்
குறைந்தது 10 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். அவர்களுக்குக் கழுத்து வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளது. அதேநேரம் ரத்தம் வரும் வகையில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு ஸ்கேன் செய்து, சிகிச்சை அளிக்கும் பணிகள் ஒரு புறம் நடைபெற்று வருகிறது.
|
ஷாக் வீடியோ
இந்த விபத்து குறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அந்த ராட்டினம் தரையில் இருந்து சுமார் 80 அடி உயரத்திற்குச் சென்று, அங்கு அது சுற்றிக் கொண்டு இருக்கிறது. அப்போது அது சற்று சாய்ந்த பின்னர், திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த ராட்டினம் கன்டிரோல் இல்லாமல் அப்படியே தரையில் விழுந்து விபத்திற்குள்ளாகிறது.

என்ன காரணம்
இந்த வீடியோ பார்ப்போரைப் பதறச் செய்கிறது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்த உடனே ராட்டினத்தின் ஆப்ரேடர், அதன் உரிமையாளர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களைத் தேடும் பணியும் ஒரு பக்கம் நடைபெறுகிறது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications