பஞ்சாபில் கெளரவக் கொலை... கத்தியால் குத்தி தலித் ஜோடி கொடூரக் கொலை
ஹோஷியார்பூர், பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக திருமணமான தலித் ஜோடியை கிராமத்துக் கும்பல் சரமாரியாகத் தாக்கி கொன்றுள்ளது.
இந்தத் தம்பதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் கூட போலீஸார் பாதுகாப்பு அளிக்கத் தவறியதால் இந்தக் கொடுமை நடந்தேறியுள்ளது.
அந்தப் பெண்ணின் உறவினர்கள்தான் இந்தக் கொடூரத்தை நடத்தயுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்த இளைஞரின் பெயர் சந்தீப். வயது 24. அவரது மனைவியின் பெயர் குஷ்பு, 22 வயது. இவர்களை முகமூ்டி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல் கல்லால் அடித்தும், கத்தியால் கடுமையாக குத்தியும் கொன்றுள்ளனர். சந்தீப்பின் வீட்டில் வைத்து இந்தக் கொடூரம் நடந்தது. ஹோஷியார்பூர் மாவட்டம் முகவோல் கிராமத்தில் சந்தீப்பின் வீடு உள்ளது.
முதலில் குஷ்புவை அந்தக் கும்பல் குறி வைத்துத் தாக்கியது. பின்னர் சந்தீப்பைக் கொன்றனர். சந்தீப் சம்பவ இடத்திலேயே பலியானார். குஷ்புவை மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் அவர் காயம் காரணமாக உயிரிழந்தார்.
சந்தீப்பைக் காக்க முயன்ற அவரது தந்தை பிரகாஷையும் அக்கும்பல் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். அவரை ஹோஷியார்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெண் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். குஷ்புவும், சந்தீப்பும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை. இதையடுத்து சந்தீப்பும், குஷ்புவும் 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்தத் தம்பதிக்கு பாதுகாப்பு அளிக்குமாறு பஞ்சாப் போலீஸுக்கு உத்தரவிட்டது.
ஆனால் அவர்களுக்கு ஹோஷியார்பூர் மாவட்ட போலீஸ் உரிய பாதுகாப்பை அளிக்கவில்லை. உயிர் பயத்திற்கு மத்தியில்தான் தங்களது கிராமத்திற்கு இத்தம்பதி வந்து வாழ்க்கையைத் தொடங்கியது. போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வாழ்ந்து வந்த அவர்களை பெண் வீட்டார் தற்போது சமாதியாக்கி விட்டனர்.












Click it and Unblock the Notifications