'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில அரசுப் பணிகளில் சேருவோர் புகை பிடிக்கக் கூடாது, குட்கா பயன்படுத்தக் கூடாது என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் கடந்த 5-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
அதே நாளில் ராஜஸ்தான் மாநில ஆளும் காங்கிரஸ் அரசு ஒரு உத்தரவை அமல்படுத்தியது. அதில் அரசு வேலையில் சேருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தம் அடிக்க மாட்டேன்..
அரசு பணிகளில் சேரும் இளைஞர்கள் புகை பிடிக்க மாட்டேன், குட்கா பயன்படுத்த மாட்டேன் என்ற உறுதிமொழியை தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து அலுவலகங்களுக்கும்..
இதற்கான அரசாணை அனைத்துத் துறைகள், ஆட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநில ஆளுநருக்கும் இது அனுப்பி வைக்கபப்ட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் இதனை செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னணி என்ன?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகையிலை கட்டுப்பாட்டு குழுதான் இப்படியான ஒரு யோசனையை அரசுக்கு வழங்கியது. இதன் மூலம் இளைஞர்களிடம் தொடக்க நிலையிலேயே புகைபிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது அதன் நோக்கம்.

உலகத்திலேயே முதன் முறையாக..
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புகையிலை கட்டுப்பாட்டு குழு அதிகாரி சுனில் சிங், இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே இப்படியான ஒரு முடிவு ராஜஸ்தானில்தான் முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அபராதம்
சரி திருட்டுத்தனமாக புகை பிடித்தால் என்ன செய்வார்கள்? இந்த கேள்விக்கும் சுனில் சிங் பதில் சொல்கிறார்.. அப்படி விதிகளை மீறுவோருக்கான தண்டனை குறித்த விவரத்தை புகையிலை கட்டுப்பாட்டுக் குழுவின் அடுத்த கூட்டத்தில் ஆலோசித்து அரசுக்கு பரிந்துரைப்போம் என்கிறார்.












Click it and Unblock the Notifications