ஜாட் போராட்டத்தால் டெல்லிக்கு வர வேண்டிய தண்ணீர் தடைபடக் கூடாது: ஹரியானாவுக்கு மத்திய அரசு உத்தரவு
டெல்லி: ஜாட் போராட்டத்தால் டெல்லியின் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்படக் கூடாது. டெல்லிக்கு வர வேண்டிய தண்ணீர் தடையில்லாமல் வந்து சேருவதை ஹரியானா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
ஹரியானாவில் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வரும் ஜாட் சமூகத்தினர் முனாக் கால்வாயை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் கால்வாயின் மதகுகளை அடைத்து தண்ணீர் வெளியேறாதபடி செய்துள்ளனர்.

இதுதான் டெல்லிக்கு வரும் தண்ணீர்ப் பாதை ஆகும். இது தற்போது தடைபட்டுள்ளதால் டெல்லியில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசை தலையிட்டு தீர்வு காணக் கோரி டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரவு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.
ஜாட் போராட்டத்தால் டெல்லிக்கு கிடைக்க வேண்டிய நீர் பாதிப்பின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு ஹரியானா அரசிடம் கூறியுள்ளது. கால்வாயின் அனைத்து மதகுகளையும் இன்று திறந்துவிட்டால் கூட நீர் டெல்லியை அடைய 24 மணிநேரம் ஆகும்.
நீர் பற்றாக்குறையால் டெல்லியில் உள்ள 7 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகை, பிரதமரின் வீடு, டெல்லியில் உள்ள ராணுவ தளங்கள், மருத்துவமனைகள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் தவிர பிற பகுதிகளில் நீர் வினியோகம் பாதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications