தேன் தடவிய வார்த்தைகளால் விஷ்வ இந்து பரிஷத் தலைவரை மடக்க முயன்றாரா ராதே மா?
டெல்லி: விஷ்வ இந்து பரிஷத் அமைப்பில் முன்பு தீவிரமாக ஈடுபட்டவரான சுரீந்தர் மிட்டல் என்பவரிடம் பெண் சாமியார் ராதே மா மயக்கும் வகையில் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோவால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண் சாமியார் ராதே மாவை வைத்து இப்போது சர்ச்சைகள் வரிசை கட்டி நிற்கின்றன. பிற ஆண் சாமியார்களின் அட்டகாசத்தை மறந்து விட்ட பலரும் இப்போது ராதே மா சர்ச்சைகளுக்கே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ராதே மா மீது சுரீந்தர் மிட்டல் என்பவர் ஒரு புகார் கூறியுள்ளார். அதில் அவர் தன்னை ராதே மா மிரட்டியதாகவும், பின்னர் மயக்கும் வகையில் பேசியதாகவும் கூறி ஆடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
முதலில் ராதே மீது வரதட்சணைக் கொடுமை வழக்குப் பதிவானது. பின்னர் அவர் கவர்ச்சிகரமான உடையில் இருப்பது போன்ற படங்கள் வெளியாகின. அவர் டான்ஸ் ஆடுவது போலவும், ஆண் பக்தர்கள் அவரைக் கட்டிப்பிடித்து தூக்குவது போலவும் வீடியோக்கள் வெளியாகின.
இந்த நிலையில், சுரீந்தர் மிட்டல் என்பவரிடம் மிரட்டலாகவும், பின்னர் கெஞ்சலாகவும், கொஞ்சலாகவும் ராதே மா பேசுவது போன்ற ஆடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இது சர்ச்சையைக் கூட்டியுள்ளது.