"சுற்றுச் சூழலை பாதுகாக்கவே ஜெயந்தி நடராஜனுக்கு அறிவுறுத்தினேன்"- மவுனம் கலைத்த ராகுல்!
டெல்லி: முந்தைய காங்கிரஸ் அரசில் சுற்றுச் சூழல் அமைச்சக விவகாரங்களில் தாம் தலையிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறிய புகாரை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மறுத்துள்ளார். சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றுதான் ஜெயந்தி நடராஜனுக்கு தாம் அறிவுரை கூறியதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் 2013ஆம் ஆண்டு ராஜினாமா செய்தார். அதன் பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கியும் இருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெயந்தி நடராஜன் எழுதிய ஒரு நீண்ட கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதில் ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஜெயந்தி முன்வைத்திருந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயந்தி நடராஜன், இந்திரா, ராஜிவ் ஆகியோர் கொள்கைகளைப் பின்பற்றிதான் நான் சுற்றுச்சூழல் அமைச்சக செயல்பாடுகளை மேற்கொண்டேன். ஆனால் என்னை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொன்ன அதே நாள் டெல்லியில் தொழிலதிபர்கள் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, சுற்றுச் சூழல் தொடர்பான முட்டுக்கட்டைகள் இருக்காது என்று கூறி தாம் நீக்கப்பட்டதை நியாயப்படுத்தியிருந்தார்.
ராகுல் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் தலையீடு அரசில் அதிகம் இருந்தது என்று அதிரடியாக குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் காங்கிரஸ் கட்சியை விட்டே தாம் விலகுவதாகவும் ஜெயந்தி நடராஜன் அறிவித்தார்.
I told Jayanthi Natarajan that we should look into the welfare of the poor, adivasis and environment: Rahul Gandhi on green clearance row.
— Press Trust of India (@PTI_News) February 4, 2015 இந்நிலையில் டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, ஜெயந்தி நடராஜனின் புகார்கள் குறித்து முதல் முறையாக விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக கூறிய ராகுல் காந்தி, சுற்றுச் சூழலைப் பாதுகாக்குமாறுதான் ஜெயந்திக்கு அறிவுரை கூறினேனே தவிர வேறு எந்த தலையீடும் இல்லை. வனம் மற்றும் ஆதிவாசிகளின் நலன்கள் பேணப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கொள்கை.
என்னுடைய போராட்டங்கள் எப்போதும் ஏழைகளுக்கு ஆதரவாகவே இருக்கும். ஜெயந்தி நடராஜன் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு எந்த ஒரு அச்சமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications