வாசன் போல.... எங்கெல்லாம் குழம்புது காங்கிரஸ் குட்டை.. ஆராய்ச்சி செய்யும் ராகுல் காந்தி!
டெல்லி: ஜி.கே.வாசனின் அதிரடி முடிவால் காங்கிரஸ் மேலிடம் சற்றே சுறுசுறுப்பாகியுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தைப் போல வேறு எந்த மாநிலத்தில் எல்லாம் கட்சியில் பிரச்சினை உள்ளது என்றஆய்வில் துணைத்தலைவர் ராகுல் காந்தி இறங்கியுள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையும் நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையின்போது எந்தெந்த மாநிலங்களில் பிரச்சினை உள்ளது என்பது குறித்து அவர் கேட்டுள்ளார்.

தொடர் தோல்விகள்
லோக்சபா தேர்தல் பெரும் தோல்விக்குப் பின்னர் பல மாநிலங்களில் காங்கிரஸ் கலகலத்துப் போயுள்ளது. தோல்விகளும் தொடர் கதையாகியுள்ளன.

முக்கியத் தோல்விகள்
மகாராஷ்டிரா, ஹரியானாவில் மிகப் பெரிய அடியை காங்கிரஸ் வாங்கியுள்ளது. இது காங்கிரஸ் மேலிடத்தை யோசிக்க வைத்துள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் பாஜக முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

கோஷ்டிப் பூசல் வேறு
இது போதாதென்று பல மாநிலங்களில் கோஷ்டிப் பூசல்கள் விஸ்வரூபம் எடுக்கஆரம்பித்துள்ளன.

தமிழகத்தில் உடைந்து போன காங்கிரஸ்
தமிழகத்தில் காங்கிரஸ் பெரும் பிளவை சந்தித்துள்ளது. தனது ஆதரவாளர்களோடு ஜி.கே.வாசன் வெளியேறி விட்டார்.

"தாத்தா"க்களுடன் ஆலோசனை
இதையடுத்து மூத்த தலைவர்களான மீரா குமார், அகமது படேல், சி.பி.ஜோஷி, மனீஷ் திவாரி உள்ளிட்டோருடன் ராகுல் காந்தி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் இதில் கலந்து கொண்டார்.

என்ன செய்யலாம்
எந்தெந்த மாநிலங்களில் சிக்கல் அதிகமாக உள்ளது. அதை எப்படி சமாளிக்கலாம், தொய்ந்து போயுள்ள கட்சியை எப்படி தூக்கி நிறுத்தலாம், பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்பது குறித்து மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினாராம்.

ராகுல் காந்தி எதையாவது செய்யப் போய்
ஏற்கனவே ராகுல் காந்தி மீது காங்கிரஸாருக்கே அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அவர் எடுக்கும் முடிவுகள் தோல்வியில்தான் போய் முடிகின்றன. இந்த நிலையில் தற்போதைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்கிறேன் என்ற பெயரில் ராகுல் காந்தி எதையாவது செய்யப் போய் அது இன்னும் ஏடாகூடமான நிலையை உருவாக்கி விடுமோ என்ற அச்சமும் காங்கிரஸாரில் ஒரு பிரிவினர் மத்தியில் நிலவுகிறதாம்.












Click it and Unblock the Notifications