பாஜக ஆட்சிக்கு வந்தால் 22,000 பேர் கொல்லப்படுவர்.. ராகுல் பேச்சால் புது சர்ச்சை
டெல்லி: பாஜக ஆட்சியைப் பிடித்தால் நாடு முழுவதும் 22,000 பேர் கொல்லப்படுவர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் விதிமுறையை மீறி ராகுல் பேசியிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மே 12ம் தேதி ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சோலன் நகரில் ராகுல் காந்தி பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசிய பேச்சுதான் தற்போது தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்குக் காரணமாகியுள்ளது.
அவர் பேசுகையில், ஜப்பானைச் சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்.. நாங்கள் ஒரே ஒரு விஷயத்துக்காகத்தான் பயப்படுகிறோம். நாங்கள் உங்களுக்கு சாலை அமைத்துத் தருகிறோம். உங்களுக்கு உதவுகிறோம். ஆனால் ஆட்சி மாறினால் அமைதி நிலவுமா என்பதில் எங்களுக்கு அச்சம் உள்ளது. இந்திய மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்களோ என்று அஞ்சுகிறோம். இந்த அச்சம் எங்களிடம் அப்பிக் கிடக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் 22,000 பேர் குறைந்தது கொல்லப்படுவார்கள். இந்த அச்சம் மக்களிடையே பரவிக் கிடக்கிறது. இந்த கேள்வி இதற்கு முன்பு எழுந்ததில்லை என்றார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் கூறியது. மேலும் இதுதொடர்பான சிடியையும் அது சமர்ப்பித்திருந்தது.
இதையடுத்து ராகுல் காந்திக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம்.












Click it and Unblock the Notifications