ஐஎஸ்ஐ பற்றி சொன்னதற்கு விளக்கமளிக்க 'டைம்' தேவை.. ராகுல் கோரிக்கை
டெல்லி: உ.பி. மாநிலம் முசாபர்நகரில் நடந்த கலவரத்தின்போது பலியான முஸ்லீம்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தொடர்பு கொண்டுள்ளதாகதான் கூறிய கருத்து குறித்தும், நாட்டில் மதக் கலவலங்களை பாஜக தூண்டி விடுவதாக தான் பேசியது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் அளித்துள்ள நோட்டீஸுக்குப் பதிலளிக்க மேலும் ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

சமீப காலமாக ராகுல் காந்தி பேசி வரும் பேச்சுக்கள் குறித்து பாஜக பிரச்சினை கிளப்பி வருகிறது. இதுதொடர்பாக அது தேர்தல் ஆணையத்திடமும் புகார் கொடுத்துள்ளது.
கடந்த மாதம் ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில் பேசுகையில், உ.பியில் கலவரம் நடந்த முசாபர்நகரில் கலவரத்திற்குப் பலியான முஸ்லீம்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஐஎஸ்ஐ அமைப்பினர் தொடர்பு கொண்டிருப்பதாக தனக்கு இந்திய உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்று கூறியிருந்தார்.
இதேபோல இன்னொரு கூட்டத்தில் அவர் பேசுகையில், நாட்டில் பிரிவினை அரசியலை பாஜக தூண்டி விட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் முசாபர் நகரில் நடந்த கலவரத்திற்கு பாஜகவே காரணம். பாஜகதான் பதட்டத்தை ஏற்படுத்தியது. அதை காங்கிரஸ்தான் போக்கியது என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளது பாஜக. இதையடுத்து விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம்.
இதுகுறித்து விளக்கம் அளிக்க ஏற்கனவே அவகாசம் கோரியிருந்தார் ராகுல் காந்தி. தற்போது மேலும் ஒரு வார கால அவகாசத்தை அவர் கேட்டுள்ளார். தற்போது திருவிழாக் காலம் ஆதலால், தான் பிசியாக இருப்பதாகவும், எனவே ஒரு வார கால அவகாசம் தேவை என்றும் ராகுல் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் ஐஎஸ்ஐ பேச்சுக்கு பல முஸ்லீம் அமைப்புகளே எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்திய முஸ்லீம்களின் விசுவாசத்தை ராகுல் காந்தி சந்தேகிப்பதாக அவை கூறியிருந்தன. மேலும் ராகுல் காந்தியிடம் ஏன் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகளும் கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications