சு.சுவாமி சொல்வதையெல்லாம் வைத்து ராகுலிடம் கேள்வி கேட்பதா மிஸ்டர் அர்னாப் கோஸ்வாமி?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி 'முதல் முறையாக' பேட்டி கொடுத்ததாக டைம்ஸ் நவ் தம்பட்டம் அடித்தாலும் சுப்பிரமணியன் சுவாமி சொல்வதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு அர்னாப் கோஸ்வாமி கேள்வி கேட்டதுதான் கேலிக்கூத்தாக இருந்தது.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு ராகுல் காந்தி கொடுத்த பேட்டி கடந்த சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டு நேற்று இரவு ஒளிபரப்பானது. சுமார் 1.30 மணி நேரம் ஒளிபரப்பானது இந்த பேட்டி.
பொதுவாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி, "சிக்கிவிடும்" அரசியல் தலைவர்களை விழிபிதுங்க வைக்கும் அளவுக்கு கேள்வி கேட்பார் என்று சிலாகிப்போரும் உண்டு. ஆனால் நேற்றைய ராகுல் காந்தி பேட்டியில் எவ்வளவு "அடக்கி வாசிக்க முடியுமோ" அவ்வளவு அடக்கி வாசித்தார் என்பதுதான் யதார்த்தமாக இருந்தது.

செம பம்மல்
ராகுல் காந்தியின் பேட்டி கிடைத்துவிட்டதே..அதுவே போதும் என்று நினைத்தாரோ.. அப்படி ஒரு பம்மல்.. வெளிப்பட்டது. ராகுல் காந்தியிடம் மீண்டும் மீண்டும் நரேந்திர மோடியுடனான விவாதத்துக்கு தயாரா? என்ற கேள்வியையே கோஸ்வாமி முன்வைத்தது இன்னொரு 'பரபரப்பு" நிகழ்ச்சிக்கு அதாவது ராகுல்- மோடியை உட்கார வைத்து டி.ஆர்.பி.யை எகிற வைக்கும் உத்தியின் வெளிப்பாடு என்பது அப்பட்டமாகவே தெரிந்தது.

தத்துவார்த்த விவாதம்?
இன்னும் சில நேரங்களில் கேள்வி கேட்ட அர்னாப் கோஸ்வாமியும் நீண்ட கேள்வியை கேட்க, ராகுல் காந்தியும் ஏதோ தத்துவம் பேசுவதைப் போல பேசிக் கொண்டிருந்தது ரசிக்கும்படியானதாகவும் இருக்கவில்லை.

ராஜிவ் சொன்னது வந்தது...
1984ஆம் ஆண்டு சீக்கியர் படுகொலையை ராஜிவ் அரசு தடுக்க பார்த்தது என்று ராகுல் காந்தி கூறினாலும், அப்போது அவர் தந்தை ராஜிவ் காந்தி அதை நியாயப்படுத்தி கூறிய, "ஒரு ஆலமரம் ஆடி சாயும் போது பூமி அதிரத்தான் செய்யும்.. அதன் அருகே உள்ள சிறுகொடிகளும் பாதிக்கத்தான் செய்யும் என்ற வார்த்தைகள் நினைவில் வராமல் இல்லை..

அரசியலில் சகஜமப்பா
அதே நேரத்தில் சில கேள்விகளுக்கு ராகுல் அளித்த அல்லது நியாயப்படுத்திய பதில்கள் சுவராசியமானதாக, அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற பாணியிலும் இருந்தது. ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் கட்சியுடன் கூட்டணி வைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு "கூட்டணி என்பது தனிப்பட்ட நபர்களைப் பொறுத்தது அல்ல.. கட்சிகளைப் பொறுத்தது" என்ற பதில் சபாஷ் ரகம்தான்.

சு.சுவாமி கேட்டாராம்..
அரசியலில் சுப்பிரமணியன் சுவாமி யார் என்பது அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தெரிந்த ஒன்றுதான்.. அவர் சொன்னார் என்று ஒரு சொதப்பல் கேள்வியை அர்னாப் கோஸ்வாமி எழுப்ப, ராகுல் நொந்து போய் பதிலளித்தார் என்று சொல்லும் வகையில் இருந்தது.
அதாவது ராகுல் கேம்பிரிட்ஜிலோ ஹார்வார்டிலோ படிக்கவில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி சொன்னாராம். அதை கேள்வி என கேட்டிருந்தார் அர்னாப். ராகுலோ தெளிவாகவே, என்னுடைய படிப்பு தொடர்பான சர்டிபிகேட்ஸை காண்பிக்கவா? தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலேயே தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேனே.. இந்த சுப்பிரமணியன் சுவாமி 40 ஆண்டுகாலமாக எங்கள் குடும்பத்தை விமர்சிப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.. என்ன மாதிரியான கேள்வி இது என எகிறிவிட்டார்.
அர்னாப் கோஸ்வாமி போன்றவர்களுக்கு இது தேவைதான்.. சு.சுவாமியெல்லாம் ஒரு "நம்பகமான" சோர்ஸ் என நம்பிக் கொண்டு கேள்வி கேட்டு மூக்குடைபடுவது என்பது வேண்டியதுதான்..

ஏமாற்றமான பேட்டி
தொலைக்காட்சி பேட்டி போன்ற பொதுவிவாதங்களுக்கு வருவதை அரிதாக கொண்டிருக்கும் ராகுல் காந்தி போன்றவர்களிடம் பேட்டி எடுக்க வாய்ப்பு கிடைக்கும் போது பார்வையாளர்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும். ஆனால் அந்த எதிர்பார்ப்பை பார்வையாளர்களுக்கும் சரி, காங்கிரஸ் தொண்டர்களுக்கும் சரி ராகுலின் பேட்டி பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் யதார்த்தம்..












Click it and Unblock the Notifications