காய்ந்து போன சப்பாத்திக்கு குட் பை.. ரயில் பயணத்தில் இனி, கொத்து பரோட்டா சாப்பிடலாம்
டெல்லி: ரயில்களில் உள்ளூர் உணவு வகைகளும், பயணிகளுக்கு கிடைக்க வழி செய்யப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று 2016-17ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் உரையின்போது அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நவீன வசதிகள் கொண்ட மேலும் 10 சமையலறைகளை ஐஆர்சிடிசி அமைக்க உள்ளது. இதன்மூலம், சுத்தமான, சுவையான உணவு ரயில் பயணிகளுக்கு கிடைக்கும்.

ஐஆர்சிடிசியில், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். உணவு தயாரிப்பு, உணவு வழங்குதல் ஆகிய இருவேறு பணிகளும், ஐஆர்சிடிசியால், பிரித்துக்கொள்ளப்படும்.
மேலும், உள்ளூர் உணவு வகைகளை உணவு மெனுவில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம், பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவை ஆர்டர் செய்ய முடியும். இவ்வாறு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
தற்போது, ரயில் பயணத்தின்போது, சப்பாத்தி, வெஜ் பிரியாணி, சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, தயிர் சாதம் போன்ற குறிப்பிட்ட சில உணவு வகைகளை மட்டுமே ஆர்டர் செய்யும் வசதி உள்ளது. இனிமேல் மாநிலவாரியாக அதிக மக்களால் விரும்பப்படும் உணவு பதார்த்தங்கள் மெனுவில் இணைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications