வெள்ள நீர் வடிய ஆரம்பித்த நிலையில், மீண்டும் விட்டு, விட்டு மழை.. பீதியில் பெங்களூர்வாசிகள்
பெங்களூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெங்களூரில், மீண்டும் இன்று பகல் முழுக்க, விட்டு, விட்டு மழை கொட்டியது. இதனால் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் சிக்கல் நிலவுகிறது.
பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை முதல் மாலை மற்றும் இரவு நேரங்களில் தினமும் மழை பெய்தது. இதனால் ஏரிகள் நிரம்பி வந்தன. வியாழக்கிழமை இரவு 4 செ.மீ மழை மொத்தமாக பெய்ததால் மடிவாளா, ஹுலிமாவு ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் பாய்ந்தது.
நேற்று மாலை முதல் மழை நின்று போயிருந்ததால், மீட்பு பணிகளை தீயணைப்பு துறை, காவல்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து துரிதமாக மேற்கொண்டு வந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வந்தது.
கொஞ்சம், கொஞ்சமாக வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில், இன்று மதியம் முதல் அவ்வப்போது மழை கொட்ட தொடங்கியுள்ளது. விட்டு விட்டு பெய்யும் இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ளம் வடிந்த பகுதிகளில் மீண்டும் நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகிறார்கள். மழை அளவு போகப்போக கூடினால், மீண்டும் படகு மூலம்தான் அம்மக்களுக்கு உணவு வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.