சல்மானை நேரில் பார்த்து ஆறுதல் கூறிய ராஜ் தாக்கரே, ஆமிர் கான்!
மும்பை: குடித்து விட்டு காரை ஓட்டி ஒருவரைக் கொன்ற வழக்கில் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள நடிகர் சல்மான்கானை திரையுலகப் பிரபலங்கள் உட்பட பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்தவகையில், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் சல்மானை வியாழனன்று சந்தித்துப் பேசினார்.
கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி அதிகாலை குடித்துவிட்டு, தானே காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார் நடிகர் சல்மான்கான். அப்போது பிளாட்பாரத்தின் மீது ஏறிய கார், அங்கிருந்த பேக்கரிக்கு வெளியே படுத்திருந்தவர்கள் மீது ஏறியது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக சல்மான்கான் மீது மும்பை போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி டி.டபிள்யூ தேஷ் பாண்டே, முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 13 வருடங்களாக நடந்து வந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப் பட்டது.
அதன்படி, சல்மான்கான் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நீதிபதி, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். இது தவிர லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதற்காக 2 மாத சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு விபரத்தை கேட்ட சல்மான்கான் நீதிமன்றத்திலேயே மனமுடைந்து அழுதார். ஆனால், அன்று மாலையே, மும்பை உயர்நீதிமன்றம் சல்மான்கானுக்கு 48 மணி நேர ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து சிறை செல்லாமலேயே தனது வீட்டுக்கு திரும்பினார் சல்மான்கான். இந்நிலையில் இன்று சல்மான்கான் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே நேற்றும் சல்மான்கானை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக பாலிவுட் பிரபலங்கள் பலர் அவரது வீட்டிற்கு படையெடுத்தனர். மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேற்று சல்மானை நேரில் சந்தித்துப் பேசினார்.
சல்மானுக்கு மிக நெருக்கமானவர் ராஜ் தாக்கரே. பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்சி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு வந்த தாக்கரே. சல்மானையும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்துப் பேசினார்.
ஆமிர்கான் -ஹிருத்திக் ரோஷன்
இதேபோல், நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆமிர் கான் மற்றும் ஹிருத்திக் போன்றோரும் சல்மானை நேரில் சந்தித்தனர். சல்மான் கான் மனதைரியத்துடன் இருக்க வேண்டும் என அவர்கள் ஆறுதல் கூறிச் சென்றனர்.
நடிகைகளில் ப்ரீத்தி ஜிந்தா, சோனாக்ஷி சின்ஹா, ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் நேரில் வந்து சல்மான்கானிற்கு ஆறுதல் கூறிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications