"காங்கிரஸ் vs பாஜக.." ராஜஸ்தானில் மகுடம் யாருக்கு? பிற்பகல் 3 மணி வரை 55% வாக்குப்பதிவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அங்கே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில், பிற்பகல் 3 மணி வரை 55.63% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இப்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஏற்கனவே வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது.

இதற்கிடையே இன்றைய தினம் ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் கடும் போட்டி இருக்கிறது.
ராஜஸ்தான் தேர்தல்: ராஜஸ்தானில் இப்போது ஒரு பக்கம் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு இருக்கிறது. எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் களமிறங்குகிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டங்கள், அசோக் கெலாட் முதல்வர் இமேஜ் ஆகியவை தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
அதேநேரம் மறுபுறம் பாஜக விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இறங்குகிறது. காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலை ஆகியவற்றை வைத்து ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதே அவர்கள் திட்டமாகும். மேலும், பசு சார்ந்த அரசியலும் ராஜஸ்தான் மாநிலத்தில் ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. காங்கிரஸை நிச்சயம் இந்த முறை வீழ்த்த முடியும் என்று பாஜக நம்புகிறது.
கடும் போட்டி: கடந்த தேர்தலைப் பொறுத்தவரை அங்கே காங்கிரஸ் கட்சி சரியாக 100 இடங்களில் வெற்றி பெற்றது. அதேநேரம் பாஜகவால் 73 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையை விட ஒரு இடம் மட்டுமே குறைவாகப் பெற்றிருந்த நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. அசோக் கெலாட் முதல்வரா பொறுப்பேற்றார். இடையில் சச்சின் பைலட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய போதிலும், அதை அசோக் கெலாட் முறியடித்தார்.
வெற்றி யாருக்கு: இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் அங்கே கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்பட்டுள்ளது. அதேநேரம் ராஜஸ்தானில் காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளும் மாறி மாறியே வென்றுள்ளன. எந்தக் கட்சியும் ஆட்சியைத் தக்கவைத்தது இல்லை. இந்தச் சூழலில் தான் இன்று அங்கே தேர்தல் நடைபெறுகிறது.
அங்கு மொத்தம் 200 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே 199 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று ராஜஸ்தானில் மொத்தம் 5.25 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். ராஜஸ்தான் தேர்தலையொட்டி 51,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இதை மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications