ராஜஸ்தான் தேர்தல்.. இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆதித்யநாத் தீவிர பிரச்சாரம்.. ஏன் தெரியுமா?
ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதிகளில் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
Recommended Video
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதிகளில் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்தியா முழுக்க ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இன்னும் தெலுங்கானா, மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. ராஜஸ்தான் தேர்தலுக்காக தற்போது தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தானில் பிரச்சாரம் செய்வதற்காக யோகி ஆதித்யநாத் களமிறங்கி உள்ளார். அவர் செய்யும் பிரச்சாரத்தில் சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.
2 நாட்கள் பிரச்சாரம்
யோகி ஆதித்யநாத் முதலில் 7 நாட்கள் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் பிரச்சார திட்டமும் அதேபோல் இருந்ததால், யோகி பிரச்சாரம் செய்யும் நாட்கள் குறைக்கப்பட்டது. யோகி ஆதித்யநாத் நேற்று ராஜஸ்தான் வந்தார். இன்று மாலை வரை அவர் பிரச்சாரம் செய்வார்.
இஸ்லாமியர்கள் உள்ள பகுதி
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில்தான் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்கிறார். மகாரான், நாக்கூர், பத்தேபூர் ஆகிய பகுதிகளில் இவர் பிரச்சாரம் செய்கிறார். மொத்தம் 6 இடங்களில் மேடை போட்டு இவர் பேச இருக்கிறார். 3 இடங்களில் நேற்றே இவர் பேசிவிட்டார்.
என்ன அக்கறை
அட, யோகிக்கு திடீர் என்று இஸ்லாமியர்கள் மீது என்ன அக்கறை என்று கேட்கலாம், அதற்கு பாஜகவில் சிலர் காரணம் சொல்கிறார்கள். யோகி ஆதித்யநாத், பிரச்சாரம் செய்யும் தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் கட்சி இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவே ஆதித்யநாத் வந்துள்ளார். பாஜக இந்த தொகுதிகளில் இந்து வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
இன்று என்ன
இன்று அவர் செய்யும் பிரச்சாரமும் ஒரு வகையில் சர்ச்சைக்கு உரிய பகுதிகளில்தான் நடக்க உள்ளது. அல்வார், பாரத்பூர், மேவாத ஆகிய பகுதிகளில் இவர் பிரச்சாரம் செய்கிறார். இந்த பகுதிகளை கூகுளில் போட்டாலே அடுத்த வார்த்தை ''Cow mob lynching'' என்றுதான் வரும். அந்தளவிற்கு இந்த பகுதிகளில் பசுவை காரணமாக காட்டி மனிதர்களை கொலை செய்யும் கூட்டம் நிரம்பிய இடம் ஆகும். இங்கு யோகியை பிரச்சாரம் செய்ய வைத்தால் பெரிய பலன் கிடைக்கும் என்று பாஜக அவரை களமிறக்கி உள்ளது.