ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம்.. புதிய அமைச்சர்களாக 15 பேர் பதவியேற்பு.. சச்சின் பைலட்டுக்கு குஷி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். ராஜஸ்தான் காங்கிரசை பொறுத்தவரை கடந்த ஆண்டு நடந்த மோதல் இந்த நாடே அறியும். ராகுல் காந்திக்கு பிடித்தவரும், துணை முதல்வராக இருந்தவருமான சச்சின் பைலட்டுக்கும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இடையே மோதல் மூண்டது.
தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் சச்சின் பைலட். ஆனால் பெரும்பான்மையை நிரூபித்ததால் அசோக் கெலாட் முதல்வர் பதிவியை தக்க வைத்துக் கொண்டார்.

சமாதானம் செய்த சோனியா
நிலைமை மோசமாகி போவதை உணர்ந்த சோனியா காந்தி சச்சின் பைலைட்டை அழைத்து சமாதானம் செய்தார். இந்த நிகழ்வு நடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. அசோக் கெலாட் அரசு தனது அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்தது.

அமைச்சரவை மறுசீரமைப்பு
அமைச்சரவையில் தனது ஆதரவாளர்களையும் சேர்க்க வேண்டும் என்று சச்சின் பைலட் ஏற்கனவே சோனியா காந்தியிடம் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட் அரசு அமைச்சரவையை இன்று மறுசீரமைப்பு செய்துள்ளது. சச்சின் பைலட்-அசோக் கெலாட் சுமார் 16 மாதங்களுக்குப் பிறகு அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. 11 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 4 இணை அமைச்சர்கள் உட்பட மொத்தம் 15 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர் .ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள்
அமைச்சர்களாக பதவியேற்ற 15 பேரில் 7 பேர் எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட ரமேஷ் மீனா மற்றும் விஸ்வேந்திர சிங் ஆகியோர் மீண்டும் அமைச்சரவை யில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள். பிரிஜேந்திர சிங் ஓலா மற்றும் முராரிலால் மீனா ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். முன்பு மாநில அமைச்சர்களாக இருந்த மம்தா பூபேஷ் பைர்வா, பஜன்லால் ஜாதவ் மற்றும் திகாரம் ஜூலி ஆகியோர் தற்போது கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

மூன்று பெண்களுக்கு இடம்
மகேந்திர ஜீத் சிங் மாளவியா, ராம்லால் ஜாட், மகேஷ் ஜோஷி, கோவிந்த் ராம் மேக்வால் மற்றும் சகுந்தலா ராவத் ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். 2023-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மூன்று பெண்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications