ராஜஸ்தான் தேர்தல்: கடந்த 5 தேர்தல்களின் முடிவு சொல்வது இதுதான்.. வரலாற்றை மாற்றுமா காங்?
ஜெய்பூர்: ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களில், ராஜஸ்தானின் டிரெண்ட் என்ன என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் கடந்த 1993 ஆண்டுக்கு பிறகு இதுவரை ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்ததாக வரலாறு இல்லை. எனவே வரும் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கும் மேல் வென்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த முறை ஆளும் கட்சி மீதான அதிருப்தி அலையை பயன்படுத்தி காங்கிரசை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதேவேளையில், கடந்த கால வரலாறுகளை மாற்றி ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரசும் பல்வேறு வியூகம் வகுத்து வருகிறது.
வாக்குறுதிகள்: ராஜஸ்தானில் அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையே இருந்த மோதல் தற்போது சற்று தணிந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நிம்மதியை கொடுத்து இருக்கிறது. அதேபோல், தேர்தலில் வெற்றி பெறும் திட்டத்துடன் பல்வேறு கவர்ச்சிகர வாக்குறுதிகளையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் - பாஜக கட்சிகளின் தேசிய தலைவர்கள் ராஜஸ்தானுக்கு அடிக்கடி விசிட் அடித்து அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 தேர்தல்கள் முடிவு: இதனால் அந்த மாநிலத்தில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. ராஜஸ்தானில் கடும் போட்டி நிலவும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ராஜஸ்தானில் கடந்த 5 தேர்தல்களின் முடிவுகள் பாஜக - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பெற்ற சீட்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றின் விவரங்களை இங்கே பார்க்கலாம். ராஜஸ்தானில் கடந்த 1990 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக பிறகு 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
இதன்பிறகு எந்த ஒரு தேர்தலிலுமே ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெறவில்லை. 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 153 இடங்களை கைப்பற்றி ஆளும் பாஜகவை வீழ்த்தியது. பாஜகவுக்கு வெறும் 33 இடங்களே கிடைத்தது. ஆனால், 2003 சட்டமன்ற தேர்தலில் இந்த நிலைமை அப்படியே மாறிவிட்டது. அதாவது பாஜக 120 இடங்களில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்தது.
பாஜகவுக்கு வாய்ப்பா?: 56 தொகுதிகளை மட்டுமே வென்று காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்தது. ஆனால் 2008 தேர்தலில் 96 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை பிடித்தது. 78 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. 2013 ஆம் ஆண்டு தேர்தலில் பவுன்ஸ்பேக் ஆன பாஜக 163 தொகுதிகளை மொத்தமாக ஸ்வீப் செய்தது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 21 இடங்களே கிடைத்தது.
முதல்வராக பாஜகவின் வசுந்தராராஜா இருந்தார். 2018 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 73 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக தோல்வியை தழுவியது. கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களின் அடிப்படையை வைத்து இந்த முறை ஆட்சியை பிடித்து விடலாம் என்ற கனவுடன் பாஜக உள்ளது.
லோக்சபா தேர்தல்: ஆனால், வரலாற்றை மாற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைப்பதோடு, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த வெற்றியை காட்டுவோம் என்று கூறி வருகிறது. மக்களின் தீர்ப்பு என்ன என்பது வரும் டிசம்பர் 3 ஆம் தேதி பட்ட வர்த்தனமாக தெரிந்து விடும். ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எந்த ஒரு தாக்கத்தையும் லோக்சபா தேர்தலில் காட்டவில்லை என்பதையே கடந்த சில தேர்தல் முடிவுகள் கட்டுகிறது.
ஏனெனில், 2009 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு 20 எம்.பிக்கள் கிடைத்தது. ஆனால், 2014 தேர்தலில் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. அதேபோல், கடந்த 2019 ஆம் ஆண்டும் காங்கிரஸ் தனது கணக்கை துவங்கவில்லை. இத்தனைக்கும் அங்கு ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் தான்..












Click it and Unblock the Notifications