எங்கம்மாவ பாத்துக்க முடியாதா?... 2 பொண்டாட்டியையும் காரோடு கொளுத்திய மஹாபுருஷன்!
தன்னுடைய தாயாரை பார்த்துக்கொள்ள முடியாதா என்று ஆத்திரத்தில் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் தன்னுடைய இரண்டு மனைவிகளையும் காரோடு வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் : தன்னுடைய தாயாரை சந்தோஷமாக பார்த்துக் கொள்ள முடியாதா என்று ஆத்திரத்தில் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் தன்னுடைய இரண்டு மனைவிகளையும் காரில் வைத்து உயிரோடு கொளுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த தீபா ராம் என்பவருக்கு டேரியா தேவி, மாலி தேவி என்று இரண்டு மனைவிகள். இவர்கள் இரண்டு பேரையும் நகை வாங்கித் தருவதாகச் சொல்லி தீபா ராம் அழைத்து சென்றுள்ளார். அப்போது குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மனைவிகளுடன் பேசி வந்துள்ளார் தீபா ராம்.
அப்போது கடுமையான வாக்குவாதம் எழுந்த நிலையில் ஓடும் காரிலேயே சத்தம்போட்டு கத்தியுள்ளார் தீபா ராம். அந்த சமயத்தில் தீபாராமின் மனைவிகள் காரில் இருந்து தப்பித்து மக்களின் உதவியை நாட முயற்சித்துள்ளனர். அப்போது அவர்களை சமாளித்து காருக்குள் தள்ளி மீண்டும் காரை ஓட்டிச் சென்றுள்ளார் தீபா ராம்.
சிறிது தூரம் காரை ஓட்டிச் சென்றுள்ள தீபா ராம், ஒரு கட்டத்தில் காரை நடுவழியிலேயே நிறுத்திவிட்டு இரண்டு மனைவிகளையும் காருக்குள் வைத்து பூட்டி, காருக்குத் தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தின் போது தீபாராமின் மனைவிகள் இருவரும் காரின் சீட்டில் அமர்ந்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் தீபா ராம் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார். இதனையடுத்து தீபா ராம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னுடைய தாயாரை நல்லபடியாக வைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து குடும்பத்தில் பிரச்னை எழுந்ததால் ஆத்திரத்தில் இதனை செய்ததாக அவர் ஒப்புகொண்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள தீபா ராம் குஜராத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.