"என் சாவுக்கு பாஜக எம்எல்ஏ காரணம்”.. மரத்தில் தூக்கிட்டு சாமியார் தற்கொலை! சிக்கிய மரண வாக்குமூலம்
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சாமியார் ரவிநாத் என்பவர் தனது மரணத்துக்கு பாஜக எம்.எல்.ஏ.வே காரணம் என்று கூறி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாமியார் ரவிநாத். இவர் அங்குள்ள ராஜ்புரா மாவட்டத்தில் ஆசிரமம் நடத்தி வருகிறார். அவரது ஆசிரமத்துக்கு அருகே பின்மால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பூரா ராம் சவுதாரியின் நிலம் இருந்துள்ளது.
இதனால் சாமியாருக்கும், பாஜக எம்.எல்.ஏவுக்கும் நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பாக எம்.எல்.ஏ. பூரா ராம் சில ஆட்களை அனுப்பி நிலத்தை அளவீடு செய்ததால் சாமியால் மன உளைச்சலில் இருந்து இருக்கிறார்.

சாமியார் தற்கொலை
இந்த நிலையில் சாமியார் ரவிநாத், சுந்தமாதா மாதா கோயில் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட சாமியார் மரண வாக்குமூலத்தை எழுதி வைத்து இருக்கிறார்.

பாஜக எம்.எல்.ஏ. மீது புகார்
அதில், பாஜக எம்.எல்.ஏ. நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாகவும் இதனால் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் தன்னுடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில் போலீசார் தற்கொலை கடிதத்தை மறைப்பதாக மற்ற சாமியார்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

போலீஸ் குவிப்பு
சாமியார் தற்கொலைக்கு நீதி கேட்டு பலர் அப்பகுதியில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவீதங்கள் ஏற்படாமல் தடுக்க ஆசிரமம் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளார்கள். ஆசிரமத்துக்கு எதிரே இருக்கும் நிலம் பாஜக எம்.எல்.ஏவுடையது என்பதை போலீசாரும் உறுதிபடுத்தி இருக்கின்றனர்.

பாஜக எம்.எல்.ஏ. விளக்கம்
இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ. பூரா ராம் கூறுகையில், "கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசிரமத்துக்கு எதிரே நிலம் வாங்கினேன். இந்த இடத்தில் ரிசார்ட் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். தாசில்தாரிடம் அனுமதி பெற்ற பிறகே நிலம் அளவீடு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் சாமியார் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரியவில்லை. எங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை."












Click it and Unblock the Notifications