தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு சொத்துக்கள் ஜப்தி - பெங்களூரு கோர்ட் உத்தரவு!
பெங்களூரு: பெங்களூருவில் படத்திற்கு முன்பணம் பெற்று நிர்ணயித்த நேரத்தில் திருப்பித் தராததால் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான ராஜேந்திரசிங் பாபுவின் அசையா சொத்துகளை ஜப்தி செய்யும்படி சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"நவசக்தி எண்டர்பிரைசஸ்" உரிமையாளர் நாகராஜிடமிருந்து 2012 இல் மோகினி என்ற திரைப்படம் தயாரிப்பதற்காக முன்பணமாக 7.20 லட்சம் ரூபாயை ராஜேந்திரசிங் பாபு பெற்றிருந்தார்.
சில காரணங்களால் படத்தை தயாரிக்க முடியவில்லை. எனவே, தான் கொடுத்த முன்பணத்தை திருப்பி தருமாறு நாகராஜ், ராஜேந்திரசிங் பாபுவிடம் பலமுறை கேட்டும் தரவில்லை.
இதையடுத்து, ராஜேந்திரசிங் பாபு மீது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நாகராஜ் வழக்கு தொடர்ந்தார்.வாதம், பிரதிவாதத்தை ஆராய்ந்த நீதிமன்றம் கடந்த 14 ஆம் தேதி ராஜேந்திரசிங் பாபுவுக்கு சொந்தமான அசையா சொத்துகளை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டது. இதற்கிடையில் நாகராஜுடன் ராஜேந்திரசிங் பாபு சமாதான பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.