அரசியல் பேச தோன்றும்! ஆனால் அனுபவம் தடுத்துவிடும்! சந்திரபாபு நாயுடு தீர்க்கதரிசி.. ரஜினி பேச்சு
விஜயவாடா: அரசியல் பேச தோன்றும், ஆனால் அனுபவம் என்னை தடுத்துவிடும் என விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவின் 100 ஆவது பிறந்தநாள் விழா விஜயவாடாவில் அவருடைய குடும்பத்தினரால் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி, என்.டி.ராமாராவின் மகன் பாலகிருஷ்ணா உள்பட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் சக்தி வாய்ந்த பிரதமர் நரேந்திர மோடியை போன்ற சக்தி வாய்ந்த பிரதமராக இருந்த இந்திரா காந்தியை எதிர்த்தவர் என்.டி. ராமாராவ் என அவருடைய அரசியல், திரைப்பயணம் குறித்து ரஜினி பேசியிருந்தார். மேலும் ரஜினிகாந்த் பேசுகையில், சந்திரபாபு நாயுடுவிற்கும் எனக்கும் 30 ஆண்டு கால நட்பு உள்ளது.
சந்திரபாபுவை எனக்கு அறிமுகப்படுத்தியதே என் நண்பர் மோகன்பாபுதான். அன்று முதல் நான் எப்போது ஹைதராபாத் சென்றாலும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசுவேன். அவருடன் பேசும் போது அறிவு தானாக அதிகரிக்கும். அந்த அளவிற்கு அவருடைய பேச்சில் ஏராளமான விஷயங்கள் அடங்கி இருக்கும். சந்திரபாபு அரசியலில் ஒரு தீர்க்கதரிசி.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை என்றாலே என்னவென விழிப்புணர்வு இல்லாத சமயத்தில் அந்த துறை குறித்து புரிந்து கொண்ட சந்திரபாபு நாயுடு தன்னுடைய ஆட்சி காலத்தில் ஹைதராபாத் நகரை ஹைடெக் சிட்டியாக மாற்றி ஐடி நிறுவனங்கள் தொழில் தொடங்க தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தார். அவருடைய ஆட்சியில்தான் ஹைதராபாத் நகரம் மாநகரமாக உருவெடுத்தது.
விஷன் 2020 என்ற திட்டத்தை அமல்படுத்தினார். அவருடைய முயற்சியின் காரணமாக ஐடி நிறுவனங்கள் மட்டும் சர்வதேச புகழ்வாய்ந்த ஐடி நிறுவனங்களும் தங்கள் கிளைகளை ஹைதராபாத்தில் திறந்தன. விஷன் 2047 என்ற திட்டத்துடன் 2047 ஆம் ஆண்டு ஆந்திரா எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்துடன் இப்போதும் சந்திரபாபு நாயுடு அரசியலில் பணியாற்றி வருகிறார் என்றார் ரஜினிகாந்த்.
அவர் மேலும் கூறுகையில் நடிகர் பாலகிருஷ்ணா கண் பார்வையாலேயே எதிரியை கொன்றுவிடுவார். அவர் தூக்கி எறிந்தால் ஜீப் கூட 30 அடி தூரத்தில் எகிறிவிடும். சினிமாவிற்கு வந்த புதிதில் வில்லனாக நடிக்கவே ஆசைப்பட்டேன். இவ்வாறு ரஜினிகாந்த் அந்த விழாவில் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications