மோடிக்கு முடிசூட்டிய கிங்மேக்கர் ராஜ்நாத்சிங்
டெல்லி: நரேந்திர மோடியின் வெற்றியை இன்று நாடே கொண்டாடலாம், ஆனால் அந்த வெற்றிக்கு வித்திட்டு திரைமறைவில் அனைத்தையும் சாத்தியப்படுத்தியவர் யார் என்றால் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தான்.
அறுவடை தெரியலை
2009ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி தனது ஐந்தாண்டு ஆட்சியை பூர்த்தி செய்தபோது இருந்த அதிருப்தி அலையை சரியாக அறுவடை செய்ய தெரியாமல் பிரதான எதிர்க்கட்சியான பாஜக கோட்டை விட்டதன் விளைவாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2வது முறையாக ஆட்சிக்கு வந்தது. இது பாஜக தலைவர்கள் செய்த பெரும் தவறு என்பதை உணர்ந்திருந்தார் வாஜ்பாய் அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத்சிங்.
பழைய கதை திரும்பும்
2013ம் ஆண்டு நிதின் கட்கரி பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்த உடன், முதல்வேலையாக கட்சியை வளர்க்க முழு வீச்சில் களமிறங்கினார். அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்ற வயதான சிங்கங்களை நம்பிக் கொண்டிருந்தால் 2009 கதைதான் திரும்பும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். இப்படியே போனால் பாஜக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும் என்பதை உ.பி.யின் முன்னாள் முதல்வராக இருந்து அனுபவம் பெற்ற ராஜ்நாத்சிங் நன்கு புரிந்து வைத்திருந்தார்.
மோடிக்கு பட்டை தீட்டினார்
பாஜகவை உயிர்ப்போடு வைக்க ஒரே வழி மோடி தான் என்பதை புரிந்துகொண்ட ராஜ்நாத்சிங், மூத்த தலைவர்களான அத்வானி உள்ளிட்டவர்களின் எதிர்ப்பை மீறி அவரை பிரதமர் வேட்பாளராக்கினார்.
ஆர்எஸ்எஸ் இருக்க பயமேன்
எங்கே தட்டினால் அத்வானி வழிக்கு வருவார் என்பதை உணர்ந்திருந்த ராஜ்நாத்சிங், அத்வானி முறுக்கி கொள்ளும் போதெல்லாம், நாக்பூருக்கு போன் அடித்துவிடுவார். அங்குள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து அத்வானிக்கு ஒரு போன் வந்தாலே மனிதர் பெட்டிப் பாம்பாய் அடங்கினார்.
ராஜ்நாத்துக்கே
அத்வானியே கப்சிப் ஆனபிறகு சிஷ்யர்களை சமாளிப்பதா பெரிய விஷயம். அத்வானியை முன்னிருத்தாமல் மோடியை கொண்டு வருவதில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சிலரே அதிருப்தியில் இருந்தனர். ஆனால் மோடியின் செல்வாக்கு, பேச்சாற்றல் போன்றவற்றை சொல்லி மனம் மாறச்செய்ததும் ராஜ்நாத் சிங்தான். பாஜக கூட்டணியில் எந்த மாநிலத்தில் சிக்கல் எழுந்தாலும் ராஜ்நாத் சிங் தலையிட்டுதான் அவற்றை தீர்த்துள்ளார். இதில் தமிழகமும் சேரும். இன்று மோடியை பிரதமராக்கி அழகு பார்க்கும் ராஜ்நாத்சிங்தான் மோடி என்னும் நிழலின் நிஜ உருவம்.