தொடரும் கலவரம்.. இரண்டு நாள் பயணமாக ராஜ்நாத் சிங் காஷ்மீர் பயணம்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அங்கு செல்கிறார்.
காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி ஜூலை 8-ம் தேதி என்கவுண்டரில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு அமைதியற்ற சூழ்நிலை நீடித்து வருகிறது. பிரிவினைவாதிகளின் வன்முறை மற்றும் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கைகளால் 2 போலீசார் உள்பட 65 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 40 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் வன்முறையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.
காஷ்மீரில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், "இந்திய அரசைப் பொறுத்தவரையில் காஷ்மீருடன் உணர்வுரீதியான உறவை வலுப்படுத்தவே விரும்புகிறது. தேவைப்படும் நேரத்தில் மட்டும் காஷ்மீரை பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. காஷ்மீரில் அமைதி திரும்பி மக்கள் இயல்பாக வாழ்க்கையை நடத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான மாநில எதிர்க்கட்சிக் குழுவினர் டெல்லி வந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரைச் சந்தித்து காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியிலான தீர்வுகாண வேண்டுமென்று வலியுறுத்தினர். இந்தச் சூழ்நிலையில் ராஜ்நாத் சிங் காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார்.