தேவைப்பட்டால் மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவோம்..பாக்.,கிற்கு எச்சரிக்கை விடுத்த ராஜ்நாத் சிங்
தேவைப்பட்டால், இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் எல்லை தாண்டி மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை நடத்தும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
போபால்: பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தினால் மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டியது வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் சமீபத்தில் இந்திய எல்லைக்குள் 250 மீட்டர் தூரம் ஊடுருவி வந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இரண்டு இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றனர்.
இறந்த பரம்ஜித்சிங், பிரேம்சாகர் ஆகியோர் தலையை துண்டித்து உடலை சிதைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் வெறியாட்டத்தை நடத்தினர். இதேபோல் கடந்த 2013-ஆம் ஆண்டு எல்லையில் இந்திய வீரர் லாஞ்ச் நாயக் ஹேம்ராஜ் உடலும் பாகிஸ்தான் ராணுவத்தால் சிதைக்கப்பட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தினால் மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டியது வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தானில் நடந்த விழா பேசிய அவர், பாகிஸ்தான் இந்திய எல்லைகள் மீது ஆக்கிரமிப்பு செய்தால் தக்க பதிலடி கொடுக்கும்படி பாதுகாப்பு படை வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், முதல் தோட்டா நம்மிடம் இருந்து செல்லக்கூடாது என்றும், பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தினால், நாம் சரமாரியாக தாக்குதல் நடத்த வேண்டும் என்றும் எல்லைப் பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல் பாகிஸ்தானுக்கு ஒரு பாடமாகும். தேவைப்பட்டால், இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் எல்லை தாண்டி அத்தகைய தாக்குதலை நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.