ஜெயலலிதா, சித்தராமையாவுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேச்சு #cauvery
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இரு மாநில நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.
இரு மாநிலங்களும் தங்களது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பராமரிக்குமாறு அப்போது அவர் இரு முதல்வர்களையும் கேட்டுக் கொண்டார். சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார்.

காவிரி விவகாரம் மீண்டும் பற்றி எரிந்து வருகிறது. இன்று பகலில் பெங்களூரில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. தமிழக வாகனங்கள் நூற்றுக்கணக்கில் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. போலீஸாரின் வாகனங்களையும் கலகக்காரர்கள் தீவைத்து எரிக்க முயன்றனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
இந்த நிலையில் இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கர்நாடக நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். அப்போது கர்நாடகத்திற்கு கூடுதல் மத்திய பாதுகாப்புப் படையினரை அனுப்பி வைக்குமாறு சித்தராமையா கேட்டுக் கொண்டார். அக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதாக ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.
பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு பேசினார் ராஜ்நாத் சிங். அவரிடம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதித்தார். கன்னட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக முதல்வரை அவர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications