கர்நாடகத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் நிலம் வாங்கினாரா ரஜினிகாந்த்?
பெங்களூரு: கர்நாடகாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் ரஜினிகாந்த் நிலம் வாங்கியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடக அரசு தலைமைச்செயலாளர் அரவிந்த் ஜாதவின் தாயார் தாராபாய் மாருதிராவ் ஜாதவ் சட்டவிரோதமாக நிலம் வாங்கி பணம் சம்பாதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தலைமைச்செயலாளர் பதவியில் இருந்து அரவிந்த்ஜாதவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே தாராபாய் மாருதிராவ் ஜாதவ் சட்டவிரோதமாக வாங்கி மேம்படுத்திய நிலத்தில் நடிகர் ரஜினிகாந்த் 2 வீட்டுமனைகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
விவசாயியாக இல்லாத நிலையில் விளைநிலத்தை வாங்கி அதை விவசாயமல்லாத நிலமாக மாற்றி சட்டவிரோதமாக பணம் சம்பாதித்துள்ளதாக தலைமைச் செயலரின் தாயார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலத்தில் சர்வே எண் 80-இல் நடிகர் ரஜினிகாந்த் 0.813 ஏக்கர் பரப்பளவு கொண்ட 2 வீட்டுமனைகள் வாங்கியிருக்கிறார். 2 வீட்டுமனைகளுக்கான கிரைய பத்திரம் 1997 ஆக.11-ஆம் தேதி பதிவுசெய்யப்பட்டுள்ளது. பத்திரத்தில் வாங்கியவரின் பெயர் சிவாஜிராவ் கேய்க்வாட் (எ)ரஜினிகாந்த் தபெ ரானோஜிராவ் என்றும், முகவரி: போயஸ்கார்டன், சென்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0.45 ஏக்கர் பரப்பளவு கொண்ட முதல் வீட்டுமனை ரூ.3.25 லட்சத்திற்கும் 0.35 ஏக்கர் பரப்பளவு கொண்ட 2-வது வீட்டுமனை ரூ.2.25 லட்சத்திற்கும் வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications