காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்.. ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம்
அதிமுக, தெலுங்கு தேசம் எம்பிக்களின் தொடர் போராட்டத்தால் ராஜ்யசபா 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: அதிமுக, தெலுங்கு தேசம் எம்பிக்களின் தொடர் போராட்டத்தால் ராஜ்யசபா 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தொடங்கிய உடனேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் ராஜ்ய சபா 11.20 மணிக்கு தொடங்கியது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதிக்கக்கோரி எம்.பி. நவநீதகிருஷ்ணன் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக நீரவ் மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதன்காரணமாக ராஜ்யசபா பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.