ராம் ரஹிமுக்கு இன்று தண்டனை விவரம் அறிவிப்பு.. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு
Recommended Video
டெல்லி: பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா தலைவர் ராம் ரஹிமுக்கு தண்டனை அறிவிக்கப்படும் நிலையில் ஹரியானாவின் ரோத்தக் மாவட்டத்தில் கலவரக்காரர்களை கண்டதும் சுட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்குக்கு அளிக்கப்பட இருக்கும் தண்டனை விவரம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியால் இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது இவர் குற்றவாளிதான் என நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, ரோத்தக் அருகே சுனாரியாவில் உள்ள மாவட்ட சிறையில் குர்மீத் ராம் ரஹிம் சிங் அடைக்கப்பட்டுள்ளார்.
நீதிபதியே செல்கிறார்
தீர்ப்பு வெளியானதும் ஏற்பட்ட கலவரத்தில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டதை கவனத்தில் கொண்டு, தண்டனை விவரத்தை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிறைக்கு நேரில் சென்று அறிவிப்பார் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அறிவித்தது. சிறையில் இதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன.
கண்காணிப்பு
முன்னெச்சரிக்கையாக ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரஹிம் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அமைந்துள்ள பகுதி உள்பட ரோத்தக் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறை செல்லும் சாலை நெடுகிலும் தடுப்பு அரண்களை அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இன்டர்நெட் இல்லை
ரோத்தக் மாவட்ட தேரா சச்சா சவுதா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரையும் முன்னெச்சரிகை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் போலீஸார் வைத்துள்ளனர். ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இணையதளம் மூலம் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்கு, இணையதளச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
ராணுவம் குவிப்பு
கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டதும் சுட ரோத்தக் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 23 கம்பெனி துணை ராணுவப்படை அங்கு குவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியான தினத்தில் ஏற்பட்டதை போன்ற கலவரம் மீண்டும் ஏற்படுவதை மத்திய, மாநில அரசுகள் விரும்பாது என்பதால் பாதுகாப்பு உச்சநிலையில் வைக்கப்பட்டுள்ளது.