திடீர் அலர்ட்.. அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒருநாள் முன்பே செல்லும் மோடி? மாறப்போகும் பிளான்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிரதமர் மோடி செல்வதாக திட்டமிடப்பட்டுள்ள பிளானில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. திடீரென வந்த எச்சரிக்கையால் பிரதமர் மோடி ஒருநாள் முன்பாகவே அயோத்தி ராமர் கோவில் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பல்வேறு சட்ட போராட்டங்களை பிறகு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 2019ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி என்பது தொடங்கியது. கோவில் கட்டுவதற்கான ஸ்ரீராம ஜென்ம தீர்த்தா எனும் அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கட்டுமான பணி என்பது வேகமெடுத்தது. ஸ்ரீராம ஜென்ம தீர்த்தா அறக்கட்டளை தான் கோவில் கட்டும் பணியை கண்காணித்து வருகிறது.
நாகரா கட்டக்கலையில் 3 அடுக்குகளாக ராமர் கோவில் கட்ட திட்டமிடப்பட்டு பணி சுறுசுறுப்பாக நடந்தது. தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக 11 நாள் விரதத்தை தொடங்கி உள்ள பிரதமர் மோடி தற்போது பல கோவில்களுக்கு சென்று வருகிறார்.
ராமாயணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் கோவில்களுக்கு பிரதமர் மோடி சென்று தரிசனம் செய்து வருகிறார். நேற்று ஆந்திர மாநிலம் லெபாக்ஷி என்ற இடத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். இது ஜடாயு பறவை மோட்சமடைந்த இடத்தில் அமைந்துள்ள கோவில் என கூறப்படுகிறது. அதேபோல் வரும் 20ம் தேதி பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
மேலும் பல கோவில்களுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். அதன்பிறகு ஜனவரி 22ல் பிரதமர் மோடி அயோத்தி சென்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது பிரதமர் மோடியின் இந்த பயண திட்டத்தில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது பிரதமர் மோடி வரும் 22ம் தேதிக்கு பதில் முந்தைய நாளான ஜனவரி 21ம் தேதியே அயோத்திக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஜனவரி 22ல் பிரதமர் மோடியின் பயண திட்டத்துக்கான நேரத்தில் பனிமூட்டம் என்பது நிலவலாம் என கூறப்படுகிறது. இதனால் அவரது விமான சேவை என்பது பாதிக்கப்படலாம்.
இதனால் விழா நிகழ்வுக்கு தாமதம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி முன்கூட்டியே ஜனவரி 21ம் தேதி அயோத்தி சென்று அங்கு தங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது இன்னும் வரவில்லை.












Click it and Unblock the Notifications