ஐஸ்வர்யா ராயை இழுத்து மோடியை விமர்சித்த ராகுல்.. பரபரப்பாகும் ராமர் கோவில் விவகாரம்.. என்னாச்சு?
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக பிரதமர் மோடியை, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மாமனாரும், நடிகருமான அமிதாப் பச்சனை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பிரதமர் மோடியை விளாசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் விவகாரம் என்பது கடந்த 500 ஆண்டுகளாக சர்ச்சையாகி வந்தது. நீண்டகால சட்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த 2019ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது அயோத்தியில் ராமர் கோவில் கட்டி கொள்ளலாம் என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

இதையடுத்து 2020ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். ராமர் கோவில் 3 அடுக்குகளாக அமைய உள்ள நிலையில் முதல் தளத்தில் பணிகள் முழுவதுமாக முடிந்துள்ளது. கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 22ம் தேதி நடந்தது.
முன்னதாக கடந்த மாதம் 18 ம் தேதி கோவில் 5 வயது நிரம்பிய பால ராமர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கு கடந்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. சிலைக்கு பிரான் பிரதிஷ்டை சடங்குகளை பிரதமர் மோடி செய்தார். அதன்பிறகு ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. கும்பாபிஷேக நாளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர். நடிகர் அமிதாப் பச்சன், அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.
அதன்பிறகு ஜனவரி 23ம் தேதி முதல் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் கூட காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியை இந்து அமைப்பினர், பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா தொடர்பாக ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி தற்போது ‛பாரத் ஜோடோ நியாய யாத்திரை' மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை உத்தர பிரதேச மாநிலத்துக்குள் நுழைந்துள்ளது. அங்குள்ள பிரக்யாராஜ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் தான் பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சனம் செய்தள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:
கடந்த மாதம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று விழாவை நடத்தினார். இந்த விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரை பிரதமர் மோடி விழாவுக்கு அழைத்து இருந்தார். இந்தியாவை வழிநடத்தும் மக்கள் இந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஓபிசி மற்றும் எஸ்சி, எஸ்டி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அழைக்கப்படவில்லை. நீங்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏதேனும் ஓபிசி அல்லது எஸ்டி, எஸ்டி முகங்களை பார்த்தீர்களா?. நாட்டை ஒருபோதும் நீங்கள் (பிரதமர் மோடி) கட்டுப்படுத்த முடியாது என்பதை மக்கள் விரைவில் காட்டுவார்கள்'' என விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்துக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதாவது ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் வராத கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி இதுபற்றி பேச எந்த உரிமையும் இல்லை என பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இது தற்போது விவாதமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications