இமாச்சலை தொடர்ந்து அசாமிலும் அந்தர் பல்டி.. பாஜகவுக்கு தாவும் தலைவர்கள்! காங்கிரஸ் திணறல்!
திஸ்பூர்: இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ள சலசலப்பு அடங்குவதற்குள் தற்போது அசாம் மாநிலத்தில் புதிய சர்ச்சைகள் வெடித்துள்ளன. அதாவது, அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ராணா கோஸ்வாமி, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்றும் சொல்லப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மாநில கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை, அரசியல் குழப்பங்கள் அதிகரித்துள்ளன. நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், இம்மாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர்தான் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம், அம்மாநிலத்தில் காங்கிரஸ்தான் ஆளும் கட்சியாக இருக்கிறது. அதாவது, காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஓட்டுகள்தான் அதிகம்.

ஆனால் எதிர்பாராத விதமாக பாஜகவின் வேட்பாளர் வெற்றி பெற்றார். இதற்கு காரணம் காங்கிரஸின் 6 எம்எல்ஏக்களும், சுயேட்சை எம்எல்ஏக்கள் 3 பேரும் பாஜகவுக்கு வாக்களித்ததுதான். இதனால் தற்போது அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் உருவாகியிருக்கிறது.
இந்த சம்பவத்தின் சலசலப்புகள் ஓய்வதற்கு முன்னரே, அசாம் மாநில காங்கிரஸில் சர்ச்சைகள் தலைதூக்கியுள்ளன. அதாவது, அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ராணா கோஸ்வாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் விரைவில் பாஜவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சனிக்கிழமை இரவு தனது சொந்த தொகுதியில் ஆதரவாளர்களை சந்தித்த அவர், அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்திருக்கிறார். இவர் கடந்த 2006 மற்றும் 2011ம் ஆண்டுகளில் இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த முறை அவருக்கு சீட் கொடுப்பதில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்தே பாஜகவில் சேர முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராணா கோஸ்வாமி விரைவில் பாஜகவின் மத்திய தலைமை மற்றும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை சந்திப்பார் என்று சொல்லப்படுகிறது. தற்போது ஹிமந்தா பிஸ்வா சர்மா, லோக்சபா வேட்பாளர்கள் குறித்து கட்சி தலைமையிடம் ஆலோசனை செய்ய டெல்லி சென்றிருக்கிறார்.
அசாம் மாநிலத்தில் இதுபோன்ற அதிருப்தி சம்பவங்கள் கடந்த சில நாட்களாகவே தீவிரமடைந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, காங்கிரஸின் செயல் தலைவரும், வடக்கு கரீம்கஞ்ச் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவுமான, கமலக்யா டே புர்காயஸ்தா, திடீரென ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications