உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகாய்!
ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான பரிந்துரையை தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அமைச்சகத்திடம் முறைப்படி அளித்துள்ளார்.
தற்போது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவிவகித்து வரும் தீபக் மிஸ்ரா அடுத்த மாதம் 2-ம் தேதி ஓய்வுபெற போகிறார்.
மத்திய அமைச்சரவை கடிதம்
புதிய தலைமை நீதிபதி பதவிக்கு தகுதியானவர்களின் பெயரைப் பரிந்துரை செய்யுங்கள் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தலைமை நீதிபதி தீபக்மிஸ்ராவை கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார்.
ரஞ்சன் கோகாய்
இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை தீபக் மிஷ்ரா மத்திய அமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளார். எனவே உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.
புதிய தலைமை நீதிபதி
இதற்கான விழா அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் என தெரிகிறது. ரஞ்சன் கோகாய், அசாமை சேர்ந்தவர். 2011-ம் ஆண்டு பஞ்சாப், ஹரியானா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, 2012-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். புதிதாக தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்கும் இவர், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பதவியில் இருப்பார்.
4 பேரில் ஒருவர்
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக 4 நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தியது தெரிந்த விவகாரமே. அந்த 4 பேரில் ஒருவர்தான் ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது.