ஒடிஷாவில் தான் பலாத்காரம் செய்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட குற்றவாளி
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் பாலியல் பலாத்கார குற்றவாளி தான் சீரழித்த 22 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர் திலிப் பெஹ்ரா(32). கார் டிரைவர். அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி பேருந்துக்காக காத்திருந்த 22 வயது பெண் ஒருவரை கடத்தி ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெஹ்ராவை கைது செய்தனர். அதில் இருந்து அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்நிலையில் பெஹ்ராவும், பாதிக்கப்பட்ட பெண்ணும் திருமணம் செய்துகொள்ள அனுமதி கோரி மாவட்ட நீதிமன்றத்தில் கூட்டாக மனு அளித்தனர். இது குறித்து நீதிமன்றம் இருவரின் கருத்துகளையும் கேட்டறிந்தது. அதன் பிறகு பெஹ்ராவின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு நீதிமன்றம் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி சிறை அதிகாரிகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். புதன்கிழமை பெஹ்ரா இந்து முறைப்படி தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
பெஹ்ராவை விடுதலை செய்யக் கோரி அந்த பெண் விரைவில் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications