கோவா போன்ற பிசி சுற்றுலாத்தலத்தில் பலாத்காரம் நடக்கத் தான் செய்யும்: அமைச்சர் திலிப் பாருலேகர்
பனாஜி: கோவா போன்ற பிசியான சுற்றுலாத்தலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கத் தான் செய்யும் என அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் திலிப் பாருலேகர் தெரிவித்துள்ளார்.
கோவாவில் போதை தடுப்புப் பிரிவு போலீசார் போன்று நடித்து 5 பேர் டெல்லியைச் சேர்ந்த 2 இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து கோவா மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் திலிப் பாருலேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கோவா போன்ற பிசியான சுற்றுலாத்தலத்தில் இது போன்ற தவறான சம்பவங்கள் நடக்கத் தான் செய்யும். 2 பெண்களை பலாத்காரம் செய்தவர்கள் அப்பாவிகள். அவர்கள் மீது சில சின்ன குற்றங்களுக்கான வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்று இனி நடக்காது.
அவர்களின் செயலால் கோவாவின் பெயர் கெடவில்லை. ஏனென்றால் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் கோவாவை அல்ல டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்றார்.
திலிப்பின் பொறுப்பற்ற பேச்சுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications