ட்ரீம்லைனர் அக்கப்போர் தொடர்கிறது... சமத்தாக லண்டன் சென்ற டெல்லி எலி... பெரும் விபத்து தவிர்ப்பு !!
டெல்லி: டெல்லியிலிருந்து லண்டன் சென்ற ட்ரீம்லைனர் விமானத்தில் எலியின் நடமாட்டம் இருப்பதாக பைலட் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் ட்ரீம் லைனர் விமானம் ஒன்று லண்டன் புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானியின் அறைக்குள் எலியின் நடமாட்டம் இருப்பதை விமானி உணர்ந்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால், விமானத்தை திட்டமிட்டப்படி லண்டனுக்கு ஓட்டிச் செல்லும்படியும், இது தொடர்பாக லண்டன் விமான நிலையத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து விமானம் லண்டனில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர், எலி தொடர்பாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால், எலி கிடைத்ததா, இல்லையா என்பது குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஒருவேளை விமானத்தில் எலி இருந்து, அது நடுவானில் விமானத்தின் ஏதாவது ஒரு வயரைக் கடித்திருந்தால் விமானம் விபத்தில் சிக்கி பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
ரயில் பெட்டிகளில்தான் எலி, கரப்பான் பூச்சி நடமாட்டம் இருப்பதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வெளியாகும். ஆனால், சமீபகாலமாக விமானத்திலும் எலி நடமாட்டம் குறித்து வெளியாகும் தகவல்கள் விமான பயணிகளுக்கு அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications