அதெப்படி விஜயவாடாவை தலைநகராக அறிவிக்கலாம்? கொந்தளிக்கும் ராயலசீமா பொதுமக்கள்!!
ஹைதராபாத்: ஆந்திராவின் புதிய தலைநகர் விஜயவாடா அருகே அமைக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளதற்கு ராயலசீமாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆந்திராவின் தலைநகராக தங்கள் பகுதியில் உள்ள கர்னூலை அறிவிக்க வேண்டும் என்பது ராயலசீமா மக்களின் கோரிக்கை. இதற்காக கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் விஜயவாடா அருகேதான் தலைநகர் அமைக்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டசபையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அப்பகுதி மக்களை ஆவேசம் அடையச் செய்தது.
சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக அப்பகுதி மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். சந்திரபாபு நாயுடு கொடும்பாவியை எரித்தனர்.
கர்னூரில் நேற்றும் போராட்டம் நீடித்தது. சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் ராயலசீமா பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications