தொடங்கிய மறுவாக்குப்பதிவு.. மத்திய பிரதேச ஓட்டுச்சாவடியில் மக்கள் ஆர்வம்.. என்ன காரணம்?
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக கடந்த 17 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 71.16 சதவீத ஓட்டுக்கள் பதிவான நிலையில் இன்று கிஷூபுரா கிராமத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்தது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் செயல்பட்டார். இந்நிலையில் தான் சட்டசபையின் 5 ஆண்டு காலம் முடிவடைந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்துக்கு நவம்பர் 17 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிவ்ராஜ் சிங் காபந்து முதல்வராக செயல்பட்டார். மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அங்கு பாஜக, காங்கிரஸ் இடையே நேரடியாக போட்டி இருந்தது.
இதனால் இருகட்சி தலைவர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது போல் கடந்த 17 ம் தேதி சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 71.16 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இந்நிலையில் தான் பிந்த் மாவட்டம் அட்டேர் சட்டசபை தொகுதியல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஹேமந்த் கட்டாரே போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தற்போதைய எம்எல்ஏ அரவிந்த் பதவுரியா களமிறங்கி உள்ளார்.
இதற்கிடையே தான் அட்டேர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிஷூபுரா கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி 71ல் சாவடி எண் 3ல் பிரச்சனை ஏற்பட்டது. இதுதவிர பிற சட்டசபை தொகுதிகளில் உள்ள 10க்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து பிரச்சனை ஏற்பட்ட இந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என மத்தியப் பிரதேச கூட்டுறவு மற்றும் பொதுச் சேவை மேலாண்மை அமைச்சர் அரவிந்த் சிங் பதாரியா கோரிக்கை வைத்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை முழுமையாக ஏற்க இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. மாறாக கிஷூபுரா கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி 71ல் சாவடி எண் 3ல் மட்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 7 மணியளவில் இந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.
பொதுமக்கள் வரிசையில் நின்று ஓட்டுப்போட தொடங்கினர். இந்த மறுஓட்டுப்பதிவை தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இந்த வேளையில் பொதுமக்களின் இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட உள்ளது. இதையடுத்து தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் அனைத்தும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications