நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு- சிபிஐ விசாரணைக்கு தயார்: பிரதமர் மன்மோகன்சிங்

சீனாவில் இருந்து நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், நான் சட்டத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக சிபிஐ அல்லது வேறு யாராவது என்னிடம் கேள்வி கேட்க விரும்பினால் பதிலளிக்க நான் தயார். என்னிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை. பிரமதரிடம் சிபிஐ அமைப்பின் ஓர் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும் அளவுக்கு அந்த அமைப்புக்கு அதிகாரம் தரப்பட வேயண்டுமா? என்று கேட்கிறீர்கள். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.
நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றம் என்ன செய்யும் அல்லது செய்யாது என்பது குறித்து நான் கருத்துகூறப் போவதில்லை. சிபிஐ வழக்குகளும் முறைகேடுகளும் எனது ஆட்சிக் காலத்தின் மீது நிழல் போல் படியுமா என்பது குறித்து வரலாறுதான் மதிப்பிட வேண்டும்.
எனக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் இடையே நியூயார்க்கில் கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பின்போது, எல்லையில் அமைதியைப் பராமரிக்க வேண்டும் என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இது எனக்குப் பெரும் அதிருப்தியளிக்கிறது.
தெலுங்கானா பிரச்னை தற்போது அமைச்சர்கள் குழுவின் முன் பரிசீலனையில் உள்ளது. இந்தப் பிரச்னையின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்தச் சிக்கலான பிரச்னைக்கு அவர்கள் சிறப்பான தீர்வைக் கண்டறிவார்கள் என்று நம்புகிறேன்.
நாட்டில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலான அரசியல் பரவி வருவது என்னை மட்டுமின்றி பலரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது. ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் என்பதைப் பொருத்தவரை அது நிகழாவண்ணம் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் தேர்தல் பிரசாரம் முன்கூட்டியே தொடங்கப்பட்டாலும் அது பலனளிக்காது. அது வீணாகிவிடும். தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் என்றார் மன்மோகன்சிங்.












Click it and Unblock the Notifications