மீண்டும் தலைதூக்கும் ”செம்மரக் கடத்தல்” - தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 9 பேர் கைது
திருப்பதி: திருப்பதி அருகே ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை கடத்தியதாக நெல்லையை சேர்ந்த 4 பேர் உள்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி அருகே உள்ள ஜீவசோனா வனப்பகுதியில், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதிக்குள் செம்மரக் கட்டைகளை வெட்டி அடுக்கி வைத்துக் கொண்டிருந்த கடத்தல் கும்பலை போலீசார் கண்டனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
ஆனால் போலீசாரின் பிடியில் கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் மட்டுமே பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் இருந்து 30 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உயரக செம்மரக் கட்டைகள் என்பதால் இதனுடைய மதிப்பு ரூபாய் 50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் செம்மரங்களை வெட்டுவதற்கான கத்தி, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்ட 9 பேரும் எம்.ஆர்.பல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில், பிடிபட்ட 9 பேரில் அமானுல்லா, சண்முகம், அரிகிருஷ்ணன், ரமேஷ் ஆகிய 4 பேரும் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மற்ற 5 பேரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்தது. கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.