திருப்பதி மலைப்பாதையில் வெடிபொருட்கள்... தாக்குதல் நடத்த தீவிரவாதிகளின் சதியா என போலீஸ் விசாரணை
திருப்பதி மலைப்பாதையில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி: திருப்பதி மலைப்பாதையில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை ஏற்படுத்த தீவிரவாதிகள் சதிதிட்டம் போட்டுள்ளனரா என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் பாதையாத்திரை வழியாகவும் சென்று வருகின்றனர். இதற்காக இரு வழிகள் உள்ளன. ஒன்று அலிபிரி மலைப்பாதை, மற்றொன்று ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை ஆகியவை ஆகும்.
இந்த வழிகளில் பக்தர்கள் நடைபயணமாக வந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.
அதிக போலீஸ்
உலகில் உள்ள பெரும்பாலானோர் வந்து செல்லும் கோயில் உள்ளதாலும் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாலும் இங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களும் பலகட்ட சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுப்பப்படுகின்றனர். கோயிலை சுற்றி குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் விமானங்கள் பறக்கவும் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கடத்தல் பணிகள் அமோகம்
திருப்பதியில் உள்ள வனப்பகுதியில் செம்மரக் கட்டைகள் கடத்தல் தொழில் மிகவும் அமோகமாக நடைபெறுகிறது. செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரும் இங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எலக்ட்ரானிக் பொருட்கள்
நேற்றிரவு திருப்பதியின் ஸ்ரீவாரி மெட்டு மலையடிவாரத்தில் ஒரு சில பகுதிகளில் செம்மரக்கட்டைகள் கடத்தல் தடுப்பு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு பை கிடந்தது. அதில் ஸ்ரீரங்கம் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.
போலீஸார் அதிர்ச்சி
அந்த பையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும், எலக்ட்ரானிக் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டது. இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதில் கேரள மாநிலத்தின் நகைக் கடைக்குச் சொந்தமான நகை பெட்டியும் இருந்தது. இதனால் கேரள மாநிலத்தவரின் கைவரியாக இருக்குமோ என்ற போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது தீவிரவாத செயலா அல்லது வேறு அசம்பாவிதம் செயலுக்கான ஏற்படா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மலைப்பாதையில் வேறு எங்கும் வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா என்றும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.