மோடியின் வேட்பு மனுவை நிராகரித்து எம்.எல்.ஏ. பதவியை பறிக்க வேண்டும்: காங். வலியுறுத்தல்
அகமதாபாத்: தமக்கு திருமணமான விவரத்தை மறைத்த நரேந்திர மோடியின் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும். அவர் தற்போது வகித்து எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த மோடி தமக்கு திருமணமாகிவிட்டது என்பதை முதல் முறையாக ஒப்புக் கொண்டு தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அகமதாபாத்தில் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா கூறியதாவது:
2002, 2007, 2012 ஆகிய சட்டசபை தேர்தல்களில் மோடி தமது திருமணம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. தற்போதுதான் தமக்கு திருமணம் ஆன உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். அப்படியானால் அவர் தவறான தகவலை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்ததை அவரே ஒப்புக் கொள்கிறார்.
இதனால் லோக்சபா தேர்தலுக்கான மோடியின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும். அத்துடன் 2012ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் உண்மை தகவலை மறைத்ததற்காக தற்போது வகித்து வரும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் மோடியின் இந்த மோசடி நடவடிக்கைக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சசிதரூரின் மனைவி மறைந்த சுனந்தா பற்றி கூறும் போது ரூ50 கோடி கேர்ள் பிரண்ட் என்றார் மோடி. இளம்பெண்ணை வேவு பார்க்கத் தெரிந்தது மோடிக்கு.. ஆனால் சொந்த மனைவியின் வருமானம் தெரியவில்லை என்கிறாரே.. பொதுமக்கள் மத்தியில் பிரம்மச்சாரி என்ற இமேஜை உருவாக்கி நாடகமாடியிருக்கிறார் மோடி.
இவ்வாறு அர்ஜூன் மோத்வாடியா கூறினார்.












Click it and Unblock the Notifications