கேரளா: ரூ374 கோடி லாவலின் ஊழல் வழக்கில் பினராயி விஜயன் விடுவிப்பு

கேரள மாநிலத்தில் உள்ள நீர்மின் நிலையங்களில் புதுப்பிப்பு, நவீனமயப் பணிகளுக்காக கனடாவை சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் ரூ.374 கோடி அரசு கஜானாவுக்கு இழப்பு ஏற்படுத்தி, ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில், கேரள முன்னாள் மின்துறை அமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயனை குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்க 2009-ம் ஆண்டு கேரள ஆளுநராக இருந்த ஆர்.எஸ். கவாய்க்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தை அமைச்சரவை பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்பினார். வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான அமைச்சரவை பினராயி விஜயனை இந்த வழக்கில் சேர்க்க அனுமதி தர வேண்டாம் என பரிந்துரைத்தது.
ஆனால் அதற்கு மாறாக ஆளுநர் ஆர்.எஸ். கவாய் அனுமதி வழங்கினார். அதன்பின்னர் பினராயி விஜயன் மற்றும் 6 முன்னாள் அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை திருவனந்தபுரம் சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி பினராயி விஜயன், 6 முன்னாள் அரசு அதிகாரிகளும் மனு தாக்கல் செய்தனர்.
இம் மனுவை நீதிபதி ஆர்.ராஜூ விசாரித்து வந்தார். விசாரணை முடிந்து பினராயி விஜயன் மற்றும் 6 முன்னாள் அரசு அதிகாரிகளையும் வழக்கில் இருந்து விடுவித்து அவர் தீர்ப்பு வழங்கினார்.












Click it and Unblock the Notifications